நடு வழியில் ஜன்னல் கண்ணாடியில் விரிசல் .. தரையிறக்கப்பட்ட டிரீம்லைனர்!
டெல்லி: ஏர் இந்தியா டிரீம்லைனர் விமானத்திற்கு நேரமே சரியில்லை. தொடர்ந்து அக்கப்போராக இருக்கிறது. நம்பி ஏறி உட்கார மக்கள் அஞ்சும் நிலை அதிகரித்து வருகிறது. கொல்கத்தாவுக்கு டெல்லியிலிருந்து கிளம்பிய ஏர் இந்தியாவின் டிரீம்லைனர் விமானத்தின் ஜன்னல் கண்ணாடியில் நடு வழியில் விரிசல் ஏற்பட்டதால் விமானத்தை மீண்டும் டெல்லிக்கேத் திருப்பி இறக்கினர்.
அடுத்தடுத்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறது டிரீம்லைனர். குறிப்பாக ஜன்னல் கண்ணாடிகள் அடுத்தடுத்து உடையும் சம்பவம் தொடர்கதையாகியுள்ளது.
வியாழக்கிழமை டிரீம்லைனர் விமானம் டெல்லியிலிருந்து கொல்கத்தாவுக்குக் கிளம்பியது. நடு வழியில் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தை மீண்டும் டெல்லிக்கேத் திருப்பி விட்டனர்.
சியோலில் ஒரு பஞ்சாயத்து
அதற்கு முன்புதான் சியோலில் என்ஜின் பிரச்சினை காரணமாக போயிங் 787 ரக விமானத்தை அவசரமாக தரையிறக்கினர். அதற்கு அடுத்த நாள் இந்தப் பஞ்சாயத்து ஏற்பட்டுள்ளது. அதேபோல துபாயில் ஒரு விமானத்தை அவசரமாக தரையிறக்கினர். விமானத்தின் ஸ்பாய்லர் பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டது.
லக்னோ மீது பறந்தபோது
டெல்லி - கொல்கத்தா விமானம் லக்னோ மீது பறந்து கொண்டிருந்தபோது கண்ணாடி விரிசல் கண்டுபிடிக்கப்பட்டது. கண்ணாடியின் வெளிப்புறத்தில்தான் விரிசல் ஏற்பட்டிருந்தது.
வெளிப்புறத்தில் விரிசல்
பல அடுக்குகளைக் கொண்டது விமானங்களின் ஜன்னல் கண்ணாடிகள். அவ்வளவு சீக்கிரம் அது உடையாது. அதிகபட்சம் வெளிப்புரத்தில் விரிசல் ஏற்படலாம். இதனால் விமானத்திற்குப் பாதிப்பு வராது. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக விமானிகள் மீண்டும் டெல்லிக்கேத் திரும்பி வந்தனர்.
ஏதாவது மோதியிருக்கலாம்
சமச்சீரற்ற வெப்ப நிலை அல்லது ஏதாவது பறவை அல்லது கல் மோதினால் இப்படி கண்ணாடியில் விரிசல் ஏற்படலாம்.
அடிக்கடி கண்ணாடி விரிசல்
ஏர் இந்தியாவின் டிரீம்லைனர் விமானங்களில் அடிக்கடி கண்ணாடியில் விரிசல் ஏற்படுவது தொடர்கதையாகியுள்ளது. கடந்த சில மாதங்களில் இது போல பலமுறை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.