எரிபொருளை கடலில் கொட்டிவிட்டு அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் கிளம்பிய ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக எரிபொருளை கடலில் கொட்டிவிட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஏர் இந்தியா விமானம் ஏஐஇ- 539 செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் கிளம்ப வேண்டியது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் 2 மணிநேரம் தாமதமாக கிளம்பியது. விமானத்தில் 195 பயணிகள் இருந்தனர். ஆனால் விமானம் ரன்வேயில் இருந்து கிளம்பியதும் மீண்டும் கோளாறு ஏற்பட்டதால் உடனே தரையிறக்கப்பட்டு ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் 8 மணிக்கு கிளம்பியது.
ஆனால் விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் மீண்டும் கோளாறு ஏற்பட்டது. உடனே விமானி கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்தார். அவர்கள் விமானத்தை உடனே தரையிறக்குமாறு தெரிவித்தனர்.
இதையடுத்து விமானம் திருவனந்தபுரத்தில் வட்டமிட்டது. விமானத்தை தரையிறக்குகையில் ஏதேனும் விபரீதம் ஏற்படாமல் இருக்க அதில் இருந்த எரிபொருள் கடலில் கொட்டப்பட்டது. அதன் பிறகு விமானம் இரவு 10.45 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
விமானம் தரையிறங்கிய ஒரு மணிநேரம் கழித்தே பயணிகள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும் மாற்று விமானம் மூலம் நேற்று அதிகாலை 5 மணிக்கு துபாய் கிளம்பக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.