மலேசிய விமானம் வீழ்ந்த இடத்திலிருந்து 90 விநாடி தூரத்தில் பறந்த ஏர் இந்தியா..!
மும்பை: மலேசியன் ஏர்லைன்ஸின் எம்எச் 17 விமானம் உக்ரைனில் புரட்சிப் படையினரால் ஏவுகணை மூலம் தாக்கி வீழ்த்தப்பட்ட சமயத்தில் ஏர் இந்தியா விமானம் எதுவும் அப்பகுதியில் பறக்கவில்லை என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை கூறியிருந்தது. ஆனால் அந்த சமயத்தில் சம்பவம் நடந்த இடத்திலிருந்து 90 விநாடி தூரத்தில் டெல்லி - பிர்மிங்காம் இடையிலான ஏர் இந்தியா விமானம் பறந்தது தற்போது தெரிய வந்துள்ளது.
ஏன் இதை சிவில் விமானப் போக்குவரத்துத் துறை மறைத்தது என்பது தெரியவில்லை. அந்த விமானம் ஏர் இந்தியாவின் டிரீம்லைனர் விமானமாகும். டெல்லியிலிருந்து பிர்மிங்காம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.
மலேசிய விமானம் தாக்குதலுக்குள்ளான இடத்திலிருந்து 25 கிலோமீ்ட்டர் தொலைவில் அது பறந்துள்ளது. டிரீம்லைனர் போன்ற விமானங்கள் இந்தத் தூரத்தை 90 விநாடிகளில் கடந்து விட முடியுமாம். எனவே பேராபத்துக்கு வெகு அருகே நமது விமானம் இருந்துள்ளது.
உக்ரைனிடமிருந்து வந்த உத்தரவு
மேலும், மலேசிய விமானம் சுடப்படுவதற்கு முன்பு, உக்ரைன் விமானக் கட்டுப்பாட்டு அலுவலகம் அதன் விமானியைத் தொடர்பு கொள்ள முயன்றுள்ளது. அது முடியாமல் போனதால், ஏர் இந்தியா விமானியை உக்ரைன் அதிகாரிகள் தொடர்பு கொண்டு, மலேசிய விமானியைத் தொடர்பு கொள்ள முடியுமா என்றும் கேட்டுள்ளனர்.
மலேசிய விமானிக்கு போட்ட உத்தரவைக் கேட்ட ஏர் இந்தியா விமானிகள்
மேலும் மலேசிய விமானிகளுக்கு உக்ரைன் விமானக் கட்டுப்பாட்டு அலுவலகம், நேரடி மார்க்கத்தில் செல்லுங்கள் என்றும் உத்தரவிட்டுள்ளனர். அதையும் ஏர் இந்தியா விமானிகள் கேட்டுள்ளனர்.
அதிர்ச்சியில் ஏர் இந்தியா விமானிகள்
இப்படி உக்ரைன் விமானக் கட்டுப்பாட்டு அலுவலகத்திலிருந்து வந்த உத்தரவுகளை கேட்டு வந்த ஏர் இந்தியா விமானிகள், சிறிது நேரத்திலேயே மலேசிய விமானம் தாக்கப்பட்டு வீ்ழ்த்தப்பட்டதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
மலேசிய விமானத்திலிருந்து வராத பதில்
முன்னதாக உக்ரைன் அதிகாரிகளிடமிருந்து வந்த உத்தரவை ஏற்று, மலேசிய விமானத்தை ஏர் இந்தியா விமானிகள் தொடர்பு கொண்டுள்ளனர். மலேசியன் 17, இது ஏர் இந்தியா 112, நாங்கள் சொல்வது கேட்கிறதா என்று ஏர் இந்தியா விமானிகள் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு மலேசிய விமானத்திலிருந்து பதில் வரவில்லையாம்.
முழுப் பூசணியை மறைத்த போக்குவரத்துத் துறை
நிலைமை இப்படி இருக்க அந்த சமயத்தில் எந்த ஏர் இந்தியா விமானமும் அப்பகுதியில் பறக்கவில்லை என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.