ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம்... ப.சிதம்பரத்தின் நடவடிக்கைகள் குறித்தும் விசாரிக்கிறது சிபிஐ
டெல்லி: ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்ய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அளித்த அனுமதி குறித்து சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவரம் டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல் நிறுவனம், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமம் கோரி விண்ணப்பித்தது. அப்போது தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பல காரணங்களை கூறி உரிமம் வழங்கவில்லை.
பின்னர் மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல்லின் பங்குகள் விற்கப்பட்ட நிலையில் ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கப்பட்டது. இதில் மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல்லின் பங்குகளை விற்றாக வேண்டும் என்று அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், சிவசங்கரனை மிரட்டினர் என்பது புகார்.
குற்றச்சாட்டு பதிவுக்கான விசாரணை
இதற்கு பிரதிபலனாக தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் குழுமத்தில் மேக்சிஸ் நிறுவனம் ரூ600 கோடி முதலீடு செய்தது என்கிறது சிபிஐ. இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவது குறித்து வரும் 23-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
சிதம்பரமும் சிக்குகிறார்
இந்த நிலையில் சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் அளித்த அனுமதி குறித்தும் விசாரித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
என்ன செய்தார் சிதம்பரம்
சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களில் ரூ.600 கோடி அளவுக்கான முதலீடுகளுக்கு மட்டும் மத்திய நிதியமைச்சர் ஒப்புதல் அளிக்க அதிகாரம் பெற்றுள்ளார். அதற்கு மேலான முதலீடுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைதான் ஒப்புதல் அளிக்க முடியும்.
எப்படி ஒப்புதல் அளித்தார்?
ஆனால், ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில் ரூ 4, 800 கோடி அளவிலான முதலீட்டுக்கு எந்த அடிப்படையில் சிதம்பரம் ஒப்புதல் அளித்தார் என்பதை சிபிஐ விசாரித்து வருகிறது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிதம்பரம் மீதும் விசாரணை
இதனால் ப.சிதம்பரத்தின் செயல்பாடுகள் குறித்தும் தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.