உல்பாவுடன் கைகோர்த்து அல் கொய்தா அஸ்ஸாமுக்குள் நுழைய முயற்சி: முதல்வர் தருண் கோகாய்
கவுஹாத்தி: அல் கொய்தா தீவிரவாதிகள் அஸ்ஸாமுக்குள் நுழைய முயற்சி செய்வதாகவும், அவர்களுக்கு உல்பா தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கக்கூடும் என்றும் அம்மாநில முதல்வர் தருண் கோகாய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அல் கொய்தா அஸ்ஸாமுக்குள் நுழைய முயற்சி செய்வதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். அல் கொய்தா முன்பும் கூட வடகிழக்கு பகுதி மற்றும் அஸ்ஸாமில் நுழைய முயற்சி செய்து தோல்வி அடைந்தது.
அல் கொய்தாவுக்கும் உல்பா தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பு உள்ளது என்று நினைக்கிறேன். அவர்களுக்கு இடையே நேரடி தொடர்பு இல்லாவிட்டாலும் கூட புரிதல் உள்ளது. அவர்கள் ஒருவரையொருவர் விமர்சிப்பது இல்லை.
துர்கா பூஜையின்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளது என்றார்.
முன்னதாக அல் கொய்தா இந்தியாவில் புதிய கிளையை துவங்கப் போவதாகக் கூறி வெளியிட்ட வீடியோ உண்மையானது என்று அமெரிக்கா தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.