ஆலப்புழா படகு இல்லங்களில் விபசாரமா?: விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள படகு இல்லங்களில் விபச்சாரம் நடைபெறுவதாகவும், தீவிரவாதிகளின் புகலிடமாக அவை மாறிவருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதனையடுத்து படகு இல்லங்களில் தீவிர சோதனை நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து வடக்கே சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது ஆலப்புழா.
மிதக்கும் படகு வீடுகள்
இயற்கை பேரெழில் கொஞ்சும் ஆலப்புழாவில் உள்ள சிற்றாறுகள் மற்றும் ஏரிகளில் வாடகைக்கு விடப்படும் படகு இல்லங்களில் தங்கியபடி, ரம்மியமான இயற்கை காட்சிகளை கண்டுகளிக்க ஏராளமான வெளிநாட்டினரும், இந்தியாவின் பிற மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப் பிரியர்களும் இங்கு வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் குவியல்
கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 60 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆலப்புழாவுக்கு வருகை தந்துள்ளனர்.
அழகிகள் சப்ளை
இங்குள்ள நீர்நிலைகளின்மீது மிதக்கும் படகு வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்குபவர்களுக்கு விபசார அழகிகள் சப்ளை செய்யப்படுவதாக கேரள அரசின் உளவுத்துறை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளது.
பட்ஜெட்டுக்கு ஏற்ப
இதற்கென அந்த மாவட்டத்தில் உள்ள பாலியல் தொழில் செய்யும் பெண்களை தொடர்புப்படுத்தி வைத்திருக்கும் படகு இல்ல உரிமையாளர்கள், வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கும், பட்ஜெட்டுக்கும் ஏற்ப அழகிகளை சப்ளை செய்து வருவதாக உள்ளூரில் லாட்ஜ் நடத்திவரும் சிலரும் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதிகளின் புகலிடம்
அதுமட்டுமின்றி, பொது மக்களின் நெருங்கிய தொடர்பு இன்றி, தனியாக இருக்கும் இந்த படகு இல்லங்கள் தீவிரவாதிகளின் புகலிடமாகவும் பயன்படக்கூடும் என மாநில உளவுத்துறை கருதுகின்றது.
விசாரணைக்கு உத்தரவு
எனவே, கேரள போலீஸ் உளவுத்துறையின் கூடுதல் இயக்குனர் ஹேமச்சந்திரன் உத்தரவின்பேரில், மாவட்ட துறைமுக அதிகாரி மற்றும் போலீஸ் அதிகாரிகள் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி, ஆலப்புழா மாவட்ட கலெக்டர் பத்மகுமார் உத்தரவிட்டுள்ளார்.