ஹபீஸ் சயீதின் மனதை மாற்ற வைதிக் முயற்சி செய்திருப்பார்: நண்பருக்கு ராம்தேவ் வக்காலத்து
டெல்லி: 26/11 மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான ஹபீஸ் சயீதை தனது நண்பர் வேத் பிரசாத் வைதிக் சந்தித்து பேசியதை யோகா குரு பாபா ராம்தேவ் நியாயப்படுத்தி பேசியுள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி தீவிரவாதிகள் மும்பையில் தாக்குல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு முக்கிய மூளையாக இருந்த தீவிரவாதி ஹபீஸ் சயீதை பிரபல பத்திரிக்கையாளரும், யோகா குரு பாபா ராம்தேவின் நண்பருமான வேத் பிரசாத் வைதிக் கடந்த 2ம் தேதி சந்தித்து பேசியுள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ராஜ்யசபாவில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் இன்று ஈடுபட்டனர்.
இந்நிலையில் இது குறித்து ராம்தேவ் கூறுகையில்,
வைதிக் ஹபீஸ் சயீதின் மனதை மாற்ற முயற்சி செய்திருப்பார். அவர் ஒரு பத்திரிக்கையாளர். அவர் யாரை வேண்டும் என்றாலும் சந்திக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
ஹபீஸ் சயீதை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை வைதிக் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பிறகே இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் உள்ள லாகூரில் வைத்து சயீதை சந்தித்ததாக வைதிக் தெரிவித்துள்ளார்.
அரசு:
வைதிக் ஹபீஸ் சயீதை சந்தித்ததற்கும், தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் கூறுகையில்,
வைதிக் சயீதை சந்தித்ததற்கும் எங்களுக்கும் எந்தவிதத்திலும் தொடர்பு இல்லை. சயீதை சந்திக்க அரசு யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. சயீத் ஒரு தீவிரவாதி தான் என்றார்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில்,
சயீதை பொறுத்த வரை அரசின் நிலையில் மாற்றம் இல்லை. இந்தியாவை பொறுத்த வரை சயீத் ஒரு தீவிரவாத தாக்குதல் வழக்கில் குற்றவாளி. அவர் இந்தியாவை தாக்க சதி திட்டம் தீட்டியவர் என்றார்.