கேரளாவில் பாஜக தலைவர் அமித்ஷா! உள்ளாட்சித் தேர்தலுக்கு புது வியூகம்!!
திருவனந்தபுரம்: பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷா முதல் முறையாக கேரளாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இங்கு விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களைக் கைப்பற்றுவதற்கான வியூகம் இந்த சுற்றுப்பயணத்தின் போது வகுக்கப்பட இருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக அமித்ஷா நியமிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக நேற்று கேரளாவுக்கு வருகை தந்தார். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அமித்ஷாவை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கேரளா பாஜக தலைவர் முரளீதரன், மூத்த தலைவர் ஓ. ராஜகோபால் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பத்மநாபசுவாமி கோயிலில்..
அதன் பின்னர் இன்று காலை திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் அமித்ஷா வழிபாடு நடத்தினார். இதனைத் தொடர்ந்து திருவல்லம் மைதானத்தில் பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார்.
உள்ளாட்சித் தேர்தல்
கேரளாவில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் கணிசமான இடங்களைக் கைப்பற்றுவது குறித்தும் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார் அமித்ஷா.
மே.வங்க பார்முலா
குறிப்பாக மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களை பாஜகவில் சேர்த்து தேர்தலை எதிர்கொண்டதைப் போல கேரளாவிலும் அதை நடைமுறைப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.
இலக்கு வைக்கப்படும் உள்ளாட்சிகள்
மேலும் கொல்லம், கொச்சி, திரிசூர், கோழிக்கோடு மாநகராட்சிகளையும் காசர்கோடு, பாலக்காடு, கொடுங்காலூர், திருவல்லா நகராட்சிகளையும் வெல்வதற்கான வியூகங்களும் விவாதிக்கப்பட இருக்கிறது.
பாஜக தலைவர் மாற்றம்?
அத்துடன் மாநில பாஜக தலைவர் முரளீதரனை நீக்க வேண்டும் என்று எழுந்துள்ள பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் புதிய தலைவர் ஒருவரை நியமிப்பது குறித்தும் அமித்ஷா ஆலோசிப்பார் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.