முசாபர்நகர் வன்முறைக்கு பழிவாங்குவோம்: மோடி 'சகா' அமித் ஷா பேச்சால் பதற்றம்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் வன்முறைக்கு பழிவாங்குவோம் என்று நரேந்திர மோடியின் சகாவும் பாஜகவின் பொதுச்செயலருமான அமித் ஷா பேசியிருப்பது புதிய சர்ச்சையையும் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது.
முசாபர்நகரில் கடந்த ஆண்டு இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு உயிர் பலியும் ஏற்பட்டது. தற்போதைய லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் முசாபர்நகர் வன்முறை முக்கிய விவகாரமாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில் முசாபர்நகர் அருகே உள்ள ராஜ்கார் என்ற ஜாட் சமூகத்தினர் வாழும் கிராமத்துக்கு பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியின் நெருங்கிய சகாவும் உத்தரப்பிரதேச பாஜக பொறுப்பாளருமான அமித்ஷா நேற்று சென்றார்.
அப்போது ஜாட் சமூகத்தினரிடம் பேசிய அமித் ஷா, நமது மரியாதையை காப்பாற்றிக் கொள்ள பழிவாங்க வேண்டிய தருணம் இது. ஜாட் சமூகத்தினர் கொல்லப்பட்டதற்கு இந்த தேர்தலில் பழிவாங்க வேண்டும் என்றார்.
முன்னதாக குர்ஜார், ராஜ்புத் மற்றும் தலித் தலைவர்களிடம் பேசிய அமித் ஷா, ஒரு மனிதனால் உணவு, தூக்கம், தண்ணீரின்றி வாழ்ந்துவிட முடியும். ஆனால் ஒரு மனிதன் அவமதிக்கப்பட்டால் அவனால் வாழ முடியாது.. பழிக்குப் பழி வாங்கியாக வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
அமித் ஷாவின் இந்த பேச்சு சர்ச்சையையும் முசாபர்நகர் பகுதியில் பதற்றத்தையும் உருவாக்கியிருக்கிறது.