பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடுவுடன் பாஜக தலைவர் அமித்ஷா அடுத்தடுத்து ஆலோசனை
ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பாஜக தலைவர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். முன்னதாக நடிகர் மற்றும் ஜன சேனா கட்சி தலைவரான பவன் கல்யாணையும் அமித் ஷா சந்தித்தார்.
பாஜக கூட்டணியில் உள்ளது தெலுங்கு தேசம். ஆந்திராவில் இக்கூட்டணி அரசு அமைந்துள்ளது. இந்நிலையில் பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமித் ஷா இன்று காலை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது இரு தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து காலை சிற்றுண்டி சாப்பிட்டனர்.
நடப்பு அரசியல் நிலவரங்கள் குறித்து இவ்விரு தலைவர்களும் ஆலோசித்துள்ளனர். முன்னதாக நேற்று மாலையில், நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாணையும் அமித் ஷா சந்தித்து ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் கட்சியிலுள்ள சிரஜ்சீவியின் சகோதரரான பவன் கல்யாண், ஆந்திராவில் பாஜக கூட்டணிக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில பாஜக நிர்வாகிகளை சந்தித்த அமித் ஷா, தென் மாநிலங்களில் பாஜகவை வளர்த்தெடுப்பதற்கான அவசியம் குறித்தும், அதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளார்.