புரட்டாசி பிரம்மோற்சவம் - ஏழுமலையானுக்கு சூட திருப்பதி சென்றது ஆண்டாள் அணிந்த மாலை
திருப்பதி: புரட்டாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஏழுமலையானுக்குச் சூடுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் நேற்று ஆண்டாள் சூடிக் களைந்த மாலை திருப்பதி எடுத்துச் செல்லப்பட்டது.
திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்டாள் சூடிக் களைந்த மாலை, கிளி மற்றும் பரிவட்டம் ஆகியவற்றை 5ம் திருநாளில் ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு அணிவிப்பது வழக்கம். அதன்படி, நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் ஆண்டாள் சூடிக்களைந்த மாலையை திருப்பதி அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக ஆண்டாளுக்கு மாலை, பரிவட்டம், கிளி உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் கோவில் தக்கார் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பூஜைகளுக்குப் பின் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்ட மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவற்றை கோவில் ஸ்தானிகம் ரெங்கராஜன் என்ற ரமேஷ் தலையில் பட்டர்கள் ஏற்றி வைத்தனர். அதைத் தொடர்ந்து மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அவை தனி காரில் திருப்பதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த மாலை அனுப்பும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.