ஆந்திராவில் காங்.குக்கு காத்திருக்கிறது மகா அடி... ஜெகன் கட்சிக்கு 19 இடங்கள் கிடைக்குமாம்!
டெல்லி: ஆந்திராவில் வருகிற லோக்சபா தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கு 11 முதல் 19 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், காங்கிரஸ் கட்சி 3வது இடத்துக்குத் தள்ளப்படும் என்றும் லோக்நிதி- ஐபிஎன் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
2வது இடத்தை தெலுங்கு தேசம் கட்சி பெறும் என்றும் அக்கட்சிக்கு 15 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
அதேசமயம், காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்கள் வரையே அதிகபட்சம் கிடைக்கலாம் என்றும் இது கணித்துள்ளது.
தெலுங்கானா - சீமாந்திரா
தெலுங்கானா தனி மாநிலப் பிரிவினை பிரச்சினையால் ஆந்திராவில் வாக்குகளும் பிரிந்து போகப் போகின்றனவாம். குறிப்பாக தெலுங்கானா மற்றும் சீமாந்திராவில் வித்தியாசமான முடிவை வரும் லோக்சபா தேர்தல் காணப்போகிறது.
ஜெகன் மோகன் ரெட்டி கை ஓங்குகிறது
காங்கிரஸில் தனக்கு உரிய கெளரவம், மரியாதை, குறிப்பாக முதல்வர் பதவியைத் தராத கோபத்தால் அப்பா பெயரில் கட்சி தொடங்கி நடத்தி வரும், சிறைக்குப் போய் திரும்பியுள்ள, ஜெகன் மோகன் ரெட்டிக்கே இந்த முறை லோக்சபா தேர்தலில் அதிக சீட்கள் கிடைக்கப் போகின்றனவாம்.
ஜெகனுக்கு 19 சீட் வரை கிடைக்கலாம்
ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ் ஆர் காங்கிரஸுக்கு 11 முதல் 19 சீட்கள் வரை கிடைக்கலாம்.
தெலுங்கு தேசம் நம்பர் 2
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 9 முதல் 15 சீட்கள் வரை கிடைக்குமாம். இக்கட்சி 2வது இடத்தைப் பிடிக்கிறது.
3வது இடத்தில் காங்கிரஸ்
தற்போது ஆந்திராவில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தேர்தலில் 3வது இடமே கிடைக்கப் போகிறது. அக்கட்சிக்கு 5 முதல் 9 சீட்கள் வரை கிடைக்கும்.
டிஆர்எஸ் கட்சிக்கு 8
தெலுங்கானாவில் செல்வாக்குடன் திகழும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு 4 முதல் 8 சீட்கள் வரை கிடைக்கலாமகாம்.
மற்றவர்களுக்கு முட்டை முதல் 4 வரை
மற்ற கட்சிகள் 4 சீட்கள் வரை அதிகபட்சம் பெறக் கூடும்.
தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னணி
ஆந்திராவில் மொத்தம் 42 லோக்சபா தொகுதிகள் உள்ளன. வரும் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் தெலுங்கானா பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஓரளவு முன்னணி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், ஒய்எஸ்ஆர் கட்சிக்கு சீமாந்திராவில் செல்வாக்கு காணப்படுமாம்.
தெலுங்கானாவில் காங்.குக்கு 33 சதவீத ஓட்டு
தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியை பின்னுக்குத் தள்ளி விட்டு அதிக வாக்குகளை காங்கிரஸ் பெறுமாம். அதாவது 33 சதவீத வாக்குகளை அது அள்ளுமாம்.
டிஆர்எஸ்ஸுக்கு 23 சதவீதம்தான்
அதேசமயம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 23 சதவீத வாக்குகளையே பெறுமாம்.
பாஜகவுக்கு 11
பாஜக 11 சதவீத வாக்குகளையும், ஒய்எஸ்ஆர் கட்சிக்கு ஒரு சதவீத வாக்குகளும் கிடைக்கும். தெலுங்கு தேசம் 13 சதவீத வாக்குகளைப் பெறும். ஆம் ஆத்மிக்கு 3 சதவீத வாக்குகள் கிடைக்கும். மற்றவர்களுக்கு மொத்தமாக 16 சதவீத வாக்குகள் கிடைக்கும்.
தெலுங்கானாவில் காங். செல்வாக்கு அதிகரிப்பு
தெலுங்கானா தனி மாநில சட்டவரைவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த பின்னர் தெலுங்கானா பகுதியில் காங்கிரஸுக்கு ஆதரவு 6 சதவீதம் அதிகரித்துள்ளது.
தெலுங்கனாவில் 17 எம்.பி. தொகுதிகள்
தெலுங்கானா பகுதியில் 17 லோக்சபா தொகுதிகளும், 119 சட்டசபைத் தொகுதிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சீமாந்திராவில் ஜெகன் செல்வாக்கு
கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா இணைந்த சீமாந்திராவில் ஜெகன் மோகன் கட்சி முன்னணியில் உள்ளது. இங்கு அக்கட்சிக்கு 41 சதவீத வாக்குகள் கிடைக்குமாம். தெலுங்கு தேசத்திற்கு 28 சதவீத வாக்குகள் கிடைக்கும். காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 16 சதவீத வாக்குகளே கிடைக்கப் போகிறதாம்.
காங்கிரஸை சீமாந்திரா கைவிடுகிறது...
இதன் மூலம் தெரிய வருவது என்னவென்றால் சீமாந்திரா, காங்கிரஸை கைகழுவுகிறது. தெலுங்கானா கை கொடுக்கப் போகிறது என்பதே.
ஒட்டுமொத்தமாக காங்.குக்கு 24 சதவீத வாக்குகள்
ஒட்டுமொத்த ஆந்திராவைக் கணக்கில் எடுத்தால் காங்கிரஸுக்கு 24 சதவீத வாக்குகள் கிடைக்கும். ஜெகன் மோகன் கட்சிக்கு 22 சதவீத வாக்குகள் கிடைக்கும். தெலுங்கு தேசம் 21 சதவீதத்தையும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 11 சதவீத வாக்குகளையும் பெறும். ஆம் ஆத்மிக்கு 2 சதவீதம் கிடைக்கும். பாஜக 10 சதவீத வாக்குகளைப் பெறும்.
தனி மாநிலத்திற்கு தெலுங்கானாவில் அபார ஆதரவு
தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்குவதற்கு அப்பகுதியில் அபார ஆதரவு காணப்படுகிறது. அதாவது 95 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 2 சதவீதம் பேரே எதிர்த்துள்ளனர். 3 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.
சீமாந்திராவில் கடும் எதிர்ப்பு
அதேசமயம், சீமாந்திராவில் 80 சதவீதம் பேர் தனி மாநிலப் பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 7 சதவீதம் பேர் ஆதரித்துள்ளனர். 13 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்கவில்லை.
ஹைதராபாத்தை கூட்டுத் தலைநகராக்க எதிர்ப்பு
தெலுங்கானா, சீமாந்திரா ஆகிய இரு மாநிலங்களின் கூட்டுத் தலைநகராக ஹைதராபாத்தை மாற்ற கடும் எதிர்ப்பு நிலவுகிறது. 49 சதவீதம் பேர் இதை எதிர்த்துள்ளனர். 12 சதவீதம் பேரே ஆதரித்துள்ளனர்.
கர்னூலை தலைநகராக்க கோரிக்கை
ராயலசீமாவில் உள்ளோரில் 44 சதவீதம் பேர் கர்னூலை சீமாந்திராவின் தலைநகராக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கடலோர ஆந்திராவில் வேறு நகரங்களுக்கு ஆதரவு
அதேசமயம், கடலோர ஆந்திராவில் விசாகப்பட்டனம் அல்லது விஜயவாடாவை தலைநகராக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் அரசு படு மோசம்
ஆந்திர மாநில காங்கிரஸ் அரசு படு மோசம் என்று 55 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தக் கருத்து தெலுங்கானாவில் 56 சதவீதமாகும், சீமாந்திராவில் 54 சதவீதமாகவும் உள்ளது.
தெலுங்கானாவில் கிரண் குமா்ர் ரெட்டிக்கு செம எதிர்ப்பு
மத்திய காங்கிரஸ் தலைமை தெலுங்கானா விவகாரத்தை சரியாக டீல் செய்யவில்லை என்று தெலுங்கானா காங்கிரஸார் குற்றம் சாட்டுகின்றனர். தனி மாநிலத்திற்கு ஆதரவு தெரிவிக்காத முதல்வர் கிரண் குமார் ரெட்டிக்கு, சீமாந்திரா பகுதியில்தான் ஆதரவு உள்ளது. தெலுங்கானாவில் அவர் மீது கடும் அதிருப்தியே வெளியிடப்பட்டது.
மறுபடியும் காங். வரக் கூடாது
காங்கிரஸ் மறுபடியும் ஆந்திராவில் வெல்லக் கூடாது என்று சீமாந்திராவில் 70 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். தெலுங்கானாவில் இது 42 சதவீதமாகவே உள்ளது. ஒட்டுமொத்தமாக 52 சதவீதம் பேர் காங்கிரஸ் மீண்டும் வரக் கூடாது என்று கூறியுள்ளனர்.
மோடிக்கு ஆதரவு
ஒட்டுமொத்த ஆந்திராவிலும் நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்று ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 22 சதவீதம் பேர் மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு 15 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. அதேசமயம், ஜெகன் மோகன் ரெட்டிக்கும், நாயுடுவுக்கும் தலா ஒரு சதவீத ஆதரவே கிடைத்துள்ளது. கெஜ்ரிவாலை ஒரு சதவீதம் பேர் ஆதரித்துள்ளனர்.