பெங்களூரில் காதலியுடன் பேசிக்கொண்டிருந்தவரை மிரட்டி கார் பறிப்பு: தமிழக கொள்ளையர்களுக்கு வலை
பெங்களூர்: காதலியுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த வாலிபரின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி காரை கடத்தி சென்ற இரு நபர்களை பெங்களூர் போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூர் கோரமங்களா முதலாவது பிளாக், விப்ரோ பார்க் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் சஞ்சீவய்யா (24). தனியார் நிறுவன ஊழியர். கோரமங்களா அருகேயுள்ள ஜக்கசந்திராவிலுள்ள ஒரு பி.ஜி.ஹாஸ்டலில் தங்கி வேலை பார்க்கும் ஐஸ்வர்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை இவர் காதலிப்பதாக கூறப்படுகிறது.
காதலியுடன் இரவு விருந்து
நேற்றுமுன்தினம் இரவு, ஐஸ்வர்யாவுடன் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு, மீண்டும் ஹாஸ்டலில் அவரை டிராப் செய்வதற்காக லோகேஷ் தனது காரில் அழைத்து வந்தார்.
ஜன்னலை தட்டிய நபர்
ஹாஸ்டல் அருகே தனது ஸ்கார்பியோ காரை (கார் பதிவு எண்-KA 34 M 7187) நிறுத்திவிட்டு உள்ளே அமர்ந்தபடி இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். இரவு 10 மணியளவில், ஒரு நபர் ஜன்னல் கார் ஜன்னலை தட்டியுள்ளார்.
கழுத்தில் அரிவாள்
இதையடுத்து ஏதோ உதவி தேவைப்படுகிறது போல என்று நினைத்த லோகேஷ் காரில் இருந்து கீழே இறங்கிவந்து என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்போது இருட்டான பகுதியில் ஒளிந்திருந்த மற்றொரு நபர் ஓடிவந்து தனது கையில் இருந்த அரிவாளை லோகேஷ் கழுத்தில் வவைத்து மிரட்டி காருக்குள் ஏறினார். இதைப்பார்த்த ஐஸ்வர்யா காரில் இருந்து இறங்கி ஓடிவிட்டார்.
தாமதமாக போலீசில் புகார்
லோகேஷை மிரட்டிய இரு நபர்களும் காரில் ஏறி அதை கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டனர். அதிர்ச்சியடைந்த லோகேஷ் தாமதமாக, அதிகாலை 3 மணிக்கு மடிவாளா காவல் நிலையத்தில் கார் கடத்தல் குறித்து புகார் அளித்தார்.
தமிழ் பேசிய கொள்ளையர்கள்
கொள்ளையர்கள் தமிழ் கலந்த கன்னடத்தில் பேசியதாக புகாரில் லோகேஷ் தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்த உடனேயே காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்திருந்தால் நகரை தாண்டி கார் போவதற்குள் பிடித்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
பெங்களூரில் இரவு நேரங்களில் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பவர்களை மிரட்டி காரை கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.