இந்தியாவிற்குள் வரும் கடத்தல் தங்கத்தின் மதிப்பு 200 டன்!
டெல்லி: வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் தங்கத்தில் 200 டன் அளவுக்கு திருட்டுத்தனமாக எடுத்துவரப்படுவதாக உலக தங்க கவுன்சில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. டெல்லியில் நடந்த இந்த கவுன்சில் கூட்டத்தில் பேசிய இந்தியாவுக்கான அந்த அமைப்பின் மேலாண் இயக்குநர் சோமசுந்தரம் இத்தகவலை கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தங்கத்தின் இறக்குமதி மீதான வரியை மத்திய அரசு 10 சதவீதமாக உயர்த்தியபிறகு தங்கத்தை கடத்துவது அதிகரித்துள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு 200 டன்னுக்கும் மேலான தங்கம் கள்ளத்தனமாக கடத்தி வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 850 முதல் 950 டன் தங்கம் தேவைப்படுகிறது.
இந்தியாவில் 22 ஆயிரம் டன் தங்க நகைகள் தனிப்பட்ட நபர்களால் (வீடுகள் மற்றும் கோயில்கள்) வைக்கப்பட்டுள்ளன. சமூக, கலாசார, பொருளாதார விஷயங்கள் நகையை வாங்குவதன் பின்னணியில் உள்ளன என்றார்.
தங்க நகைக்கு தரசான்று அளிக்கும், பிஐஎஸ் அமைப்பின் இயக்குநர் சுனில் சோனி, இந்த நிகழ்ச்சியில் பேசும்போது "ஹால்மார்க் தங்க நகைகளுக்கு தனிப்பட்ட அடையாள எண் வழங்க பிஐஎஸ் திட்டமிட்டுள்ளது என்றார்.