லோக்சபாவில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி
டெல்லி: பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் திங்கட்கிழமை துவங்கியது. அன்றைய தினம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தொடர் அமளியில் ஈடுபட்டன. இதனால் ஒரு பணியும் செய்யாமல் லோக்சபா நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை மத்திய ரயில்வே துறை அமைச்சர் 2014ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ரயில்வே துறையில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவையிடம் ஒப்புதல் கேட்கப்படும் என்று கவுடா அறிவித்தார். இதை கண்டித்து காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் உள்ள கவுடாவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தார். இதையடுத்து அவர் நாளை அனைவரும் பெரிதும் எதிர்பார்க்கும் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
பொது பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வெளியிடப்படுமோ என்று மக்கள் ஆவலாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.