பலாத்காரத்தால் வருமானம் குறைந்துவிட்டதாக பேச்சு! வருத்தம் தெரிவித்தார் அருண் ஜேட்லி
டெல்லி: தலைநகர் டெல்லியில் நடந்த ஒரு பாலியல் பலாத்கார சம்பவத்தால் இந்தியாவுக்கு பல மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு பெருகியுள்ளது.
டெல்லியில் நடந்த சுற்றுலா அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய மத்திய நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி, "டெல்லியில் நடந்த ஒரு பலாத்கார சம்பவம் எதிரொலியால், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து அது பல மில்லியன் டாலர் இழப்புக்கு வழி செய்தது. இந்தியாவுக்கு தேவையான அனைத்தையும் கடவுள் அளித்துள்ளார். அதை சரியாக பயன்படுத்துவதுதான் நமது பணி" என்று தெரிவித்தார்.
டெல்லியில் மருத்துவ மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை உதாரணம் காட்டி அருண் ஜேட்லி பேசினார். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற அர்த்தத்தில் ஜேட்லி பேசினாலும்கூட, இது பலாத்காரத்தை அலட்சியம் செய்யும் பேச்சு என்று அந்த மாணவியின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மருத்துவ மாணவியின் தந்தை நிருபர்களிடம் கூறுகையில், "அருண் ஜேட்லி பேச்சு பொறுப்பற்றதனமானது. அவரது பேச்சு எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது" என்றார். இதுகுறித்து ஜேட்லி கூறுகையில், "நான் எந்த சம்பவம் என்று குறிப்பிட்டு பேசவில்லை. அப்படியே யாருடைய மனதாவது எனது பேச்சால் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.