அருவிக்கராவில் அரும்பிய தாமரை.. கேரளாவில் காலூன்றுகிறது பாஜக!
திருவனந்தபுரம்: அருவிக்கரா தொகுதி இடைத்தேர்தலில் பாஜக பெற்றுள்ள வாக்குகளை வைத்து பார்க்கும்போது அக்கட்சி கேரளாவில் மளமளவென வளர்ந்து வருவதாக தெரிகிறது.
கேரள சபாநாயகர் கார்த்திகேயன் மறைவை தொடர்ந்து அவர் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அருவிக்கரா தொகுதிக்கு கடந்த 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
குஷ்பு பிரசாரம்
முன்னதாக, ஆளும் காங்கிரஸ் கூட்டணி சார்பில், கார்த்திகேயனின் மகன், சபரிநாதன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். முதல்வர் உம்மன் சாண்டி, காங்கிரஸ் நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு போன்ற ஸ்டார்கள் அவரை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர்.
இடதுசாரி, பாஜக
அவரை எதிர்த்து இடதுசாரி கூட்டணி சார்பில் விஜயகுமாரும், பாஜக சார்பில் ராஜகோபாலும் முக்கிய வேட்பாளர்களாக களம் கண்டனர். இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காங்கிரசின், சபரிநாதன், 10 ஆயிரத்து 128 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அடடே, பாஜக
சபரிநாதன் மொத்தம் 56 ஆயிரத்து 448 வாக்குகள் பெற்றார். 2வது இடம், விஜயகுமாருக்கு கிடைத்தது. அவர் 46 ஆயிரத்து 320 வாக்குகள் பெற்றனர். இதில் ஆச்சரியப்படும் அம்சம் என்னவென்றால், பாஜகவின் ராஜகோபால், 34 ஆயிரத்து 145 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.
காங்கிரஸ் கோட்டை
அருவிக்கரா எப்போதுமே காங்கிரஸ் கோட்டையாக இருந்துவரும் தொகுதி. கார்த்திகேயன் மறைவையடுத்து, அவரது மகனுக்கு ஆதரவாக எழுந்த அனுதாப அலைகளும் காங்கிரசுக்கு சாதகமாக இருந்தது. இருப்பினும், தமிழகத்தை போலவே கேரளாவிலும் இதுவரை தத்தளித்துக் கொண்டுள்ள பாஜக இத்தனை வாக்குகள் பெற்றது அரசியல் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் ஒப்புதல்
இரு தினங்கள் முன்பு சபரிநாதன் அளித்த பேட்டியொன்றில், 1 வருடத்துக்கு முன்பு, இதே தொகுதியில் தேர்தல் நடந்திருந்தால், போட்டி எனக்கும், பாஜகவுக்குமாகத்தான் இருந்திருக்கும். ஏனெனில் அப்போது மோடி அலை நாடு முழுவதும் வீசியது. அது அருவிக்கராவிலும் எதிரொலித்திருக்கும் என்று கூறியிருந்தார். அதேபோலத்தான் தற்போது, ராஜகோபாலும் வாக்குகளை பெற்று அசத்தியுள்ளார்.
திருப்தியில்லை
இருப்பினும், ராஜகோபாலுக்கு இதில் திருப்தியில்லை. தேர்தல் முடிவு குறித்து பேட்டியளித்துள்ள அவர், நான் 2ஆவதாகவாவது வருவேன் என்று எதிர்பார்த்தேன். மூன்றாமிடம் சென்றது கவலையளிக்கிறது என்று கூறியுள்ளார். ஆனால், காங்கிரஸ், இடதுசாரிகள் கோட்டையான கேரளாவில் வலதுசாரி பாஜக பெற்றுள்ள இத்தனை வாக்குகள் முக்கியத்துவம் வாய்ந்தது. இடதுசாரி மற்றும் பாஜக ஆகிய இரு எதிர்க்கட்சிகளுமே ஒருவேளை (அதிசயமாக) இணைந்து போட்டியிட்டிருந்தால், அவர்களுக்கு கிடைத்த வாக்குகள் காங்கிரசை தோற்கடித்திருக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது.