அசாம் கலவரம்: பிரதமரிடம் அறிக்கை அளித்தது மத்திய உள்துறை அமைச்சகம்
டெல்லி: அண்டை மாநிலமான நாகாலாந்தில் இருந்து வந்து அசாம் எல்லையிலுள்ள கோலகாட் மாவட்டத்திலுள்ள மக்களை சிலர் தாக்கிவருவதாகவும், இதில் 9 பேர் உயிரிழந்ததாகவும், 10 ஆயிரம் பேர் வீடிழந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அசாம் மாநில அரசு தங்களை காக்க தவறிவிட்டதாக கூறி கோலகாட் மாவட்ட மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். காயமடைந்தவர்களை பார்க்க சென்ற அசாம் முதல்வர் தருன்கோகாய் பாதுகாப்பு வாகனங்கள் மீது கலவரக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியிருந்தனர்.
துப்பாக்கி சூடு மற்றும் போலீசாரின் தடியடியால் 18 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே அசாம் மற்றும் நாகாலாந்து மக்கள் நடுவேயான மோதலை தடுப்பதில் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டதாக அசாம் முதல்வர் தருன் கோகாய் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், அசாம் கலவரம் குறித்து பிரதமரின் முதன்மை செயலாளர் நிர்பேந்திர மிஸ்ரா, உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை கேட்டிருந்தார். இதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகம் தனது அறிக்கையை பிரதமர் அலுவலகத்திடம் இன்று அளித்துள்ளது.