ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: செப்டம்பர் 20ல் தீர்ப்பு!
பெங்களூரு: முதல்வர் ஜெயலலிதா உள்பட நான்கு பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20ஆம் தேதி தீர்க்க வழங்கப்படும் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சுதாகரன், சசிகலா ஆகியோர் மீது 1997ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை 1998ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இறுதி வாதம் நிறைவு
இந்த வழக்கில் அரசு தரப்பு வாதம் முடிந்து ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பு இறுதி வாதமும் நிறைவடைந்தது. இந்த நிலையில் சுதாகரன், இளவரசி ஆகியோர் சார்பில் வழக்கறிஞர் அமித் தேசாய் செவ்வாய்கிழமை தனது இறுதி வாதத்தை நிறைவு செய்தார். அவர் மொத்தம் 8 நாட்கள் வாதிட்டு தனது தரப்பு வாதங்களை எடுத்து வைத்தார். இதையடுத்து அரசு தரப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 பேரின் இறுதி வாதமும் முடிவடைந்துவிட்டது.
42 நாட்கள் இறுதி வாதம்
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் மொத்தம் 42 நாட்கள் இறுதி வாதம் நடைபெற்று உள்ளது. இதில் ஜெயலலிதா சார்பில் 25 நாட்களும், சசிகலா சார்பில் 9 நாட்களும், சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரது சார்பில் 8 நாட்களும் இறுதி வாதம் நடந்தது.
கூடுதல் அவகாசம்
இந்த வழக்கு தொடர்பாக மேலும் சில தகவல்களை எடுத்து வைத்து வாதிட தனக்கு கூடுதலாக 2 மணி நேரம் வாய்ப்பு வழங்குமாறு ஜெயலலிதா வழக்கறிஞர் பி.குமார், நீதிபதியிடம் முறையிட்டார். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வாதிடுமாறு அவருக்கு அனுமதி அளித்தார்.
நீதிபதி எச்சரிக்கை
ஆனால், வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார், நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிடாமல் கர்நாடகா உயர் நீதிமன்றத்திற்கு சென்று விட்டார். இதனால், கோபம் அடைந்த நீதிபதி, ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞருக்கு எச்சரிக்கை விடுத்ததோடு, இறுதி வாதத்தை வியாழக்கிழமை தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
பவானி சிங் வாதம்
அதன்படி இந்த வழக்கில் இறுதி வாதம் இன்று காலையில் தொடங்கியது. ஜெயலலிதா தரப்பில் ஆஜராக வழக்கறிஞர் குமார் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் ஆகியோர் இன்று தனது இறுதிவாதத்தை தொடங்கினர்.
செப்டம்பர் 20ல் தீர்ப்பு
காலை தொடங்கிய இறுதி வாதங்கள் மாலையில் முடிந்த நிலையில், வழக்கில் செப்டம்பர் 20ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்தார். அன்றைய தினம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
17 ஆண்டுகால வழக்கு
17 ஆண்டுகாலமாக நடைபெற்றுவரும் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாக உள்ளதால் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் திக் திக் மனநிலையில் ஆழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.