ஓடும் ரயிலில் பயணியின் ஆடைகளை பதம் பார்த்த எலிகள்... ரூ. 15 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
டெல்லி: ரயில் பயணியின் பைகளை எலி கடித்துக் குதறியதாகத் தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப் பட்டோருக்கு ரூ. 15 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க ரயில்வே நிர்வாகத்திற்கு டெல்லி நுகர்வோர் குறை தீர்ப்பாணையம் உத்தரவிட்டுள்ளது.
ரயில் பெட்டிகளின் தூய்மை சரிவர பேணப்படாத காரணங்களால் அவ்வப்போது எலி மற்றும் கரப்பான்பூச்சி போன்றவற்றின் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர் பயணிகள். கடந்த சில நாட்களுக்கு முன்னர் விமானத்தில் எலியில் நடமாட்டம் இருந்ததாக செய்தி வெளியானது.
அந்த வகையில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் 8ம் தேதி டெல்லியை சேர்ந்த பன்சால் என்பவர் அக்டோபர் மாதம் 8ம் தேதி டெல்லியில் இருந்து கேரளா மாநிலம் ஏர்ணாகுளத்திற்கு ரயிலில் பயணம் செய்துள்ளார்.
எலிகளின் அட்டகாசம்...
ரயில் பயணத்தின் போது அவர் கொண்டு வந்திருந்த ஆடைகள் இருந்த பைகளை எலிகள் கடித்து குதறியது. அவரது துணிகளை எலிகள் துண்டு துண்டாக வெட்டியுள்ளது. இதனைப் பார்த்த பன்சால் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.
குற்றச்சாட்டு...
ஆடைகள் அனைத்தையும் எலியின் பற்களுக்கு பலி கொடுத்த பன்சால், ரயில்வேயின் கவனக்குறைவே இதற்குக் காரணம் எனக் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக டெல்லி நுகர்வோர் குறை தீர்ப்பாணையத்திலும் புகார் பதிவு செய்தார்.
நஷ்ட ஈடு...
அதில், தன்னுடைய ஆடைகள் உள்ளிட்டப் பொருட்கள் சேதமடைந்ததற்கு ரயில்வே நிர்வாகம் ரூ. 18,400-ஐ நஷ்ட ஈடாக தரவேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார்.
உத்தரவு...
இந்தப் புகாரை விசாரித்த தீர்ப்பாணையம், குற்றம் நிரூபணம் ஆனதால் பாதிக்கப்பட்ட பன்சாலுக்கு ரூ. 15 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என ரயில்வேக்கு உத்தரவிட்டுள்ளது.
தேவையற்ற இழப்புகள்...
மேலும், ரயில்வே பணிமனையில் ரயில்வே ஊழியர்களின் அலட்சியம் காரணமாகவே ரயில் பெட்டிகள் முறையாக பராமரிப்பு இல்லாமல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. முறையான பராமரிப்பு மற்றும் சுத்தமாக இல்லாத ரயில் பெட்டியால் பயணத்தின் போது தேவையற்ற இழப்புகள் ஏற்படுகிறது.
மேலாளரே பொறுப்பு...
எனவே, பெரிய ரயில்வே சந்திப்புக்களில் மேற்பாற்வைவில் குறைபாடுகள் மற்றும் முறையான பராமரிப்பு இல்லாததற்கு வடக்கு ரயில்வே கோட்ட ரயில்வே மேலாளரே பொறுப்பு. இம்மார்க்கத்தில் நூற்றுக்கணக்கான ரயில்கள் தினமும் வந்து செல்கின்றன. லட்சக்கணக்கான பயணிகள் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்' என தீர்ப்பாணையம் தெரிவித்துள்ளது.