அமைதியாக முடிந்தது பெங்களூர் பந்த்: சாப்ட்வேர் நிறுவனங்கள்- பள்ளிகள் மூடல்- சாலைகள் 'வெறிச்'
பெங்களூர்: பெங்களூர் பள்ளியில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து 50 கன்னட அமைப்புகள் இன்று பெங்களூர் பந்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதையடுத்து பெங்களூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பெங்களூரில் இன்று பெரும்பாலான டாக்சிகள் ஓடவில்லை. ஆட்டோ்க்கள் குறைவான எண்ணிக்கையில் இயங்கின. அதே போல மாநகர அரசுப் பேருந்துகளும் குறைவான எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டன. ஆனால், அந்த பஸ்களிலும் கூட்டம் குறைவாக இருந்தது.
பெரும்பாலான சாப்ட்வேர் நிறுவனங்கள் இன்று விடுமுறை அறிவித்திருந்தன. பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீடுகளில் இருந்தே பணியாற்றுமாறு கூறிவிட்டன.
அரசு நிறுவனங்கள், பள்ளிகள் மூடப்பட்ட அதே நேரத்தில், தனியார் நிறுவனங்களில் பெரும்பாலானவை இயங்கின. ஆனால் ஊழியர்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே பணிக்கு வந்தனர்.
ஹோட்டல்கள், கடைகள், பேக்கரிகள் திறந்திருந்தன. ஆனால், பெரிய வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்படவில்லை.
பந்த்துக்கு பெங்களூரிலுள்ள மால்கள் ஆதரவு அளித்திருந்தன. எனவே மாலை 6 மணிவரை மால்கள் திறக்கப்படவில்லை. பல திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. மால்களின் முன்பு போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது. இருப்பினும் கல்வீச்சு உள்ளிட்டவை ஏற்பட்டால் பாதிக்கப்படாமல் இருக்க மால் கட்டிடங்களின் மீது வலை விரிக்கப்பட்டிருந்தது.
கேஆர் மார்க்கெட், சிவாஜி நகர் ரசல் மார்க்கெட் போன்ற நகரின் முக்கிய மார்க்கெட்டுகள் வழக்கம்போல திறந்திருந்தன.
இதனிடையே, கன்னட அமைப்புகள் நடத்தும் பந்த் என்பதால் தமிழக பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப்பட கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, தமிழகத்தில் இருந்து பெங்களூர் வரும் பஸ்கள் ஒசூர் நகர எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. அதே நேரம் கர்நாடக அரசு பேருந்துகள் ஒசூர்-பெங்களூர் நடுவே இயங்கின.
பந்த்தின்போது சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் முயற்சிகளில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனர் அலோக் குமார் எச்சரிக்கைவிடுத்திருந்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடி பட்டியலில் உள்ள 1200 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அசம்பாவித சம்பவங்களை தடுக்க பெங்களூர் நகரில் 17 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களுடன், கர்நாடக மாநில ரிசர்வ் போலீஸ், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மாலை 6 மணிக்கு மேல் மக்களின் இயல்புவாழ்க்கை திரும்பியது. பந்த்துக்கு கலவையான வரவேற்பு கிடைத்தது. இருப்பினும் பந்த் ஏற்பாட்டாளர்கள் இது மிகப்பெரிய வெற்றி பெற்ற பந்த் என்று அறிவித்தனர்.