பெங்களூர் அருகே தனியார் ஆம்னி பஸ்சில் தீ: 8 பேர் உடல் கருகி பலி
பெங்களூரு: பெங்களூரு அருகே தனியார் சொகுசுப் பேருந்து தீப்பிடித்து விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 8 பயணிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எஸ்.பி.ஆர் டிராவல்ஸ் என்ற அந்த சொகுசுப் பேருந்து தாவனகரேவில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 29 பேர் பயணம் செய்தனர்.
இன்று அதிகாலையில் சித்ரதுர்கா அருகே என்.ஹெச் 4 தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்ற போது சாலையின் நடுவில் இருந்த டிவைடரில் திடீரென்று மோதி தீப்பிடித்து விபத்திற்குள்ளானது. இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
காயமடைமந்த பயணிகளில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீக்காயமுற்ற மேலும் பல பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட உடன் பஸ் டிரைவர் தப்பியோடிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சொகுசு பேருந்தில் தீவிபத்து ஏற்படுவது தொடர்கதையாகிவருகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பெங்களூருவில் இருந்து மும்பை சென்ற ஆம்னி பஸ் தீ பிடித்து, 7 பேர் கொல்லப்பட்டனர், 40 பேர் காயமடைந்தனர். சமீபத்தில் பெங்களூருவில் இருந்து ஹைதராபாத் சென்ற வோல்வா பேருந்து தீப்பிடித்து எரிந்து, 45 பயணிகள் உடல் கருகி பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.