பலாத்காரத்துக்கு எதிராக நாளை பெங்களூர் பந்த்: ஆட்டோக்கள் ஓடாது, பள்ளிகள் மூடல்
பெங்களூர்: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெங்களூரில் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டி நாளை வியாழக்கிழமை ஒரு நாள் பந்த் நடத்த கன்னட அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளன. இதற்கு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன.
பெங்களூரில் பள்ளி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, கல்லூரி மாணவி காரில் கடத்தி சென்று பலாத்காரம் செய்யப்பட்டது என சமீபகாலமாக பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
வாட்டாள் நாகராஜ் அழைப்பு
இதனை கண்டிக்கும் வகையில் வியாழக்கிழமை ஒரு நாள், 'பெங்களூர் பந்த்' நடத்த கன்னட அமைப்புகள் முடிவு செய்துள்ளன. கன்னட சலுவளி வாட்டாள் கட்சி தலைவர் நாகராஜ் ஏற்பாட்டின்பேரில், பல கன்னட அமைப்புகள் இணைந்து பந்த் நடத்துகின்றன. வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பந்த் நடைபெறும்.
முதல்வர் வீட்டுக்கு ஊர்வலம்
இந்த போராட்டத்துக்கு பெங்களூர் நகர மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று வாட்டாள் நாகராஜ் இன்று அளித்த பேட்டியில் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், முதல்வர் வீட்டுக்கு ஊர்வலமாக சென்று பலாத்காரங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு மனு அளிக்கவும் கன்னட அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
பள்ளிகளுக்கு விடுப்பு
இதனிடையே, பந்த் காரணமாக, பெங்களூரிலுள்ள சில பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளன. அனைத்து ஆட்டோ சங்கங்களும் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆட்டோ சங்கங்கள் ஆதரவு
ஆதர்ஷா ஆட்டோ சங்க பொதுச்செயலாளர் சி.சம்பத், ஒன்இந்தியாவிடம் கூறியதாவது: பலாத்காரத்திற்கு எதிராக பந்த் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால், அந்த நோக்கத்தை மதித்து பெரும்பாலான ஆட்டோ சங்கங்களும் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இருப்பினும் ஆட்டோ இயக்க கூடாது என்று யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்த மாட்டோம். இது தனிப்பட்ட ஆட்டோ டிரைவர்களின் சூழ்நிலை மற்றும் விருப்பத்தை பொருத்தது" என்று தெரிவித்தார். அதே நேரம் சில ஆட்டோ சங்கங்கள் பந்த்துக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளன.
பஸ்கள் இயக்கம்
அதே நேரம், நகர பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏசி பஸ்கள் மட்டும் காலையில் இயக்கப்படாது. நிலைமையை போலீசார் ஆய்வு செய்த பிறகு அனைத்து பஸ்களும் இயக்கப்படும் என்று பெங்களூர் மாநகர போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பெங்களூரிலுள்ள திரைப்பட மால்கள் காலை முதல் மாலை வரை மூடப்பட்டிருக்கும்.