சிறுமி பலாத்காரம் எதிரொலி... அனைத்து பள்ளிகள், பஸ்களில் கேமரா பொருத்த பெங்களூர் போலீஸ் உத்தரவு
பெங்களூர்: 6 வயது சிறுமி பள்ளி வளாகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகளைத் தொடர்ந்து பெங்களூரில் அனைத்துப் பள்ளிகள் மற்றும் பள்ளிப் பேருந்துகளில் கண்காணிப்புக் கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என பெங்களூர் போலீஸ் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர், பெங்களூர் தனியார் பள்ளி வளாகத்தில் அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் காவலாளியால் 6 வயது பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் முஸ்தபா கைது செய்யப்பட்டார். ஆனபோதும், அடுத்தடுத்து பெங்களூரில் அரங்கேறிய பாலியல் குற்றங்களால் அந்நகர போலீஸ் கமிஷனர் ராகவேந்திரா இடமாற்றம் செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து புதிய கமிஷனராக பதவி ஏற்ற எம்.என்.ரெட்டி மாணவ, மாணவிகள் பாதுகாப்பு தொடர்பாக பல அதிரடி உத்தரவுகள் பிறப்பித்துள்ளார்.
- அதன்படி அனைத்து பள்ளிகளிலும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
- மாணவர்கள் பள்ளிக்கு அழைத்து வரப்படும் மற்றும் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்படும் பள்ளிக்கூட பஸ்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட வேண்டும். அதில் உள்ள கேமரா மூலம் பள்ளிக்கூட பஸ்கள் கண்காணிக்கப்பட வேண்டும்.
- அதிக அளவு மாணவர்களை பள்ளி வேன்களில் ஏற்றக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
- மேலும், பள்ளிக்கூட பஸ்களை இயக்கும் டிரைவர்களின் முழு விவரம் இருக்க வேண்டும். அவர்களது லைசென்சுகளையும் சரி பார்க்க வேண்டும். டிரைவர்கள் தவறாக நடக்க முயற்சி செய்தால் அதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
- மாணவர்கள் வீடு போய்ச் சேரும் வரை பஸ்சில் ஒரு ஆண் ஊழியரும், ஒரு பெண் ஊழியரும் உடன் செல்ல வேண்டும். பள்ளிகளில் ஒவ்வொரு மாடியிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். ஒவ்வொரு மாடியிலும் கண்காணிப்பு பணிக்கு ஊழியரை தேவைப்பட்டால் நியமிக்கலாம்.
- அவசர காலத்துக்கு உதவ பெற்றோர் ஒவ்வொருவரும் தங்களது செல்போன் எண்களை வகுப்பு ஆசிரியர், ஆசிரியைகளிடம் கொடுக்க வேண்டும். அந்த எண்ணில் ஆசிரியர், ஆசிரியை மட்டுமே பேச வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
- இந்த வழிகாட்டுதல்கள் சம்பவம் நடந்த விப்ஜியார் பள்ளியில் வருகிற 14-ந் தேதிக்குள் அமல்படுத்தப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக கமிஷனர் ரெட்டி தெரிவித்தார்.
அந்த பள்ளிக்கு மட்டும் அதிக நிபந்தனைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.