ஓட்டு போட ஆட்களை பஸ்களில் அழைத்து சென்ற அதிமுக.. பெங்களூர் வீதிகள் வெறிச்..
பெங்களூர்: பெங்களூரில் கூலி வேலை செய்யும் பலரும் வாக்களிக்க தமிழகம் சென்றதால் பூ, பழம் விற்பனை செய்வோர் இன்றி நகர சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், சேலம், திருவண்ணாமலை போன்ற பக்கத்து மாவட்டங்களில் இருந்து பெங்களூரில் தங்கியிருந்து கூலி வேலை, கட்டிட வேலை செய்வோர் அதிகம். அதேபோல மார்க்கெட்டிலும், தள்ளுவண்டிகளிலும் பூ, பழம் போன்றவற்றை விற்பனையிலும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் ஈடுபடுகிறார்கள்.
Carry Images Courtesy: Mahesh.K
ஆனால் நேற்று இவர்களில் பெரும்பாலானோரை தெருக்களிலோ, மார்க்கெட்டுகளிலோ பார்க்க முடியவில்லை. நகரின் மிகப்பெரிய மார்க்கெட்டான கே.ஆர்.மார்க்கெட், மடிவாளா மார்க்கெட்டுகளில் காய்கறி, பழம் விற்பனை செய்வோர் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
இதற்கு காரணம், தமிழகத்தில் இன்று நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க அவர்கள் கிளம்பி சென்றுவிட்டதுதான் என்று கூறப்படுகிறது. நேற்று இரவு பெங்களூரில் இருந்து தமிழகம் சென்ற பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்ததாக போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்தனர்.
பல ஆண்டுகளாக பெங்களூரில் வசிப்பவர்கள் இங்கேயே வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக்கொண்டனர். எனவே அவர்கள் கடந்த 17ம்தேதி கர்நாடகாவில் நடந்த வாக்குப்பதிவின் தங்கள் வாக்குகளை பதிவு செய்துவிட்டனர். ஆனால் அண்டை மாவட்டத்து தமிழர்களுக்கு தங்களது சொந்த ஊர்களில்தான் வாக்காளர் அடையாள அட்டை இருப்பதால், அவர்கள் ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.
அன்றாடம் காய்ச்சிகளான கூலித்தொழிலாளர்கள் போக்குவரத்துக்கு செலவு செய்து சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க ஆர்வம் காட்டியது ஏன் என்று சிலரிடம் கேட்டதற்கு, ஒரு ஓட்டுக்கு இவ்வளவு தொகை அளிக்கப்படும் என்று சில கட்சிகளின் நிர்வாகிகள் கூறியதால் அதை நம்பி சென்றோம் என்று கூறினர்.
பெங்களூர்-ஒசூர் நகரங்களுக்கு இடைப்பட்ட சந்தாபுரா, ஆனேக்கல் பகுதிகளில் வசிக்கும், பக்கத்து மாவட்டத்துக்காரர்களை பஸ்கள் மூலமாக சொந்த ஊர்களுக்கு அதிமுகவினர் அழைத்துச் சென்றுள்ளனர்.
கேஆர் மார்க்கெட் பகுதியிலிருந்து 500 பேரை வாகனங்களில் அனுப்பி வைத்துள்ளதாக பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு அதிமுக நிர்வாகி கூறினார்.
இதனால் தள்ளுவண்டி தமிழர்கள் இன்றி, சாலைகள் வெறிச்சோடின. அதே நேரம் சாப்ட்வேர் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணிபுரிவோரில் பெரும்பாலானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டவில்லை.