ஒன்றாக பள்ளி, கல்லூரிக்கு சென்று பியாஸ் ஆற்றில் ஒன்றாகவே அடித்துச் செல்லப்பட்ட 2 மாணவர்கள்
ஹைதராபாத்: சிறுவயதில் இருந்து நெருங்கிய நண்பர்களாக இருந்த விஎன்ஆர் விஞ்ஞான ஜோதி இன்ஸ்டிடியூட் கல்லூரி மாணவர்களான கல்லுரி ஸ்ரீ ஹர்ஷா மற்றும் தேவசிஷ் போஸ் ஆகியோர் பியாஸ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் நல்லகுண்டாவைச் சேர்ந்தவர்கள் கல்லுரி ஸ்ரீ ஹர்ஷா மற்றும் தேவசிஷ் போஸ். அவர்கள் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். ஒன்றாக பள்ளியில் படித்த அவர்கள் ஹைதராபாத்தில் உள்ள விஎன்ஆர் விஞ்ஞான ஜோதி இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி கல்லூரியில் ஒன்றாக சேர்ந்து படித்து வந்தனர்.
இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற இடத்தில் பியாஸ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 24 மாணவர்களில் ஹர்ஷாவும், தேவசிஷும் அடக்கம். சிறுவயதில் இருந்து ஒன்றாக இருந்தவர்கள் ஒன்றாகவே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது நல்லகுண்டாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து ஹர்ஷாவின் தந்தையான வழக்கறிஞர் ஆர்.கே.வி. பிரசாத் கூறுகையில்,
என் மகன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு எனக்கு போன் செய்து நாங்கள் சிம்லா போகிறோம் என்றான். விபத்து குறித்து அறிந்தவுடன் அவனுக்கு போன் செய்தபோது அவனை தொடர்புகொள்ள முடியவில்லை என்றார்.
தேவசிஷ் தனது அம்மா நிர்மலாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை போன் செய்து பேசியுள்ளார்.