அடுத்தவர் மனைவி மீது ஆசிட் வீசியவருக்கு மரண தண்டனை: ம.பி.கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
மத்திய பிரதேச மாநிலம், போர்சா நகரில் வசித்தவர் ரூபி குப்தா (28). கடந்தாண்டு, ஜூலை 21ம்தேதி இவரது வீட்டுக்குள் அத்துமீறி புகுந்த அதே பகுதியை சேர்ந்த யோகேந்திர சிங் தோமர், ரூபாவின் மீது திராவகத்தை வீசிவிட்டு தப்பி சென்றார். இந்த சம்பவத்தில், தடுக்க முற்பட்ட ரூபாவின் உறவினர்கள் சிலரும் காயமடைந்தனர்.
அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், ரூபா மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் யேகேந்திர சிங் தோமரை கைது செய்தனர். அம்பா மாவட்ட, கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையில் நீதிபதி சி.குப்தா தனது தீர்ப்பை அளித்துள்ளார். அந்த தீர்ப்பில் தோமருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
"இது மிகவும் மோசமான குற்றம். எனவே ஆயுள் தண்டனை போதாது என்பதால் மரண தண்டனை விதிக்கிறேன்" என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளார். தன்னை ஒரு தலையாக காதலித்த தோமரை திருமணம் செய்ய மறுத்த ரூபா, சஞ்சு குப்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனால் கோபமடைந்த தோமர், ரூபா தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தபோது ஆசிட் வீசினார்.
இதனிடையே தீர்ப்பு குறித்து ரூபாவின் கணவர் சஞ்சு குப்தா வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுபோன்ற தண்டனைகள்தான், வருங்காலங்களில் பெண்கள் மீதான தாக்குதலை நடத்துபவர்களை யோசிக்க வைக்கும் என்று அவர் கூறினார்.