ஏ.டி.எம் ரசீதுகளால் புற்றுநோய் வருமாம்- வரவே வராது என்கிறார்கள் வங்கி அதிகாரிகள்
அவுரங்காபாத்: இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஏ.டி.எம் ரசீது தாள்களினால் புற்றுநோய் ஏற்படலாம் என்ற கிலியை ஏற்படுத்தும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அவுரங்காபாத்தை சேர்ந்த டாக்டர் அம்பேத்கர் மரத்தாவாடா பல்கலைக் கழகத்தின் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இது அனைத்து தரப்பு மக்களின் இடையேயும் கடும் திகிலைக் கிளப்பியுள்ளது.
பிஸ்பினால்:
அவ்வறிக்கையின்படி, "ஏ.டி.எம் ரசீது தாளால் புற்று நோய் அபாயம் உள்ளது. ஏ.டி.எம் ரசீது தாள்களில் பிஸ்பினால் ரசாயனம் கலந்துள்ளது. இவை மனித தோலில் ஊடுருவி உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்'' என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ராஜஸ்தானில் விவாதம்:
இந்த கடுமையான பிரச்சினை ராஜஸ்தான் சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டது. இதற்கு அந்த மாநில அமைச்சர் பதில் அளிக்கையில், "ஏ.டி.எம். தாள்களால் புற்று நோய் ஏற்படுகிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இதுபற்றி ஆய்வு நடத்த உயர் நிலைக் குழுவை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது " என்றார்.
மறுத்த அதிகாரிகள்:
ஏ.டி.எம் ரசீது தாளால் புற்றுநோய் ஏற்படுமா என்று வங்கி உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் இதனை மறுத்துள்ளனர்.
அனைத்து இடத்திலும் உபயோகம்:
தற்போது பிஸ்பினால் ரசாயனம் பூசப்பட்ட தாள்கள் எல்லா இடங்களிலும் வந்து விட்டது. ஏ.டி.எம் மட்டுமின்றி கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், பெட்ரோல் பங்க், பஸ் கண்டக்டர், ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் என அனைத்து இடங்களிலும் இந்த தாள்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன.
காலத்தின் கட்டாயம்:
விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக காலத்தின் கட்டாயம் கருதி அவை பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் ஏ.டி.எம் தாள்களால் புற்றுநோய் ஏற்பட்டது என்று எந்த புகார்களும் எங்ளுக்கு வந்ததில்லை.
நிரூபணம் இல்லை:
இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத ஒன்று. எனவே ஏ.டி.எம் ரசீது தாள்களில் புற்று நோய் பரவாது என்று கூறப்பட்டுள்ளது.