ஜாமீன் மனுவை கடுமையாக எதிர்த்த பவானி சிங்... ஜெ. மனு விசாரணை அக். 7ம் தேதிக்கு ஒத்திவைப்பு
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க சிறப்புஅரசு வழக்கறிஞர் பவானி சிங் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கை மேலும் விசாரிக்க மறுத்து, 2 நிமிடங்களுக்குள் ஒத்தி வைத்து விட்டார் கர்நாடக உயர்நீதிமன்ற விடுமுறை கால நீதிபதி ரத்னகலா. வழக்கு அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மற்றும் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நேற்று இரவு அரசு சிறப்பு வழக்கறிஞராக அவசரம் அவசரமாக நியமிக்கப்பட்ட பவானி சிங் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்து மனு செய்தார்.
அவரது மனுவையும், ஜெயலலிதா தரப்பு வாதத்தையும் கூட நீதிபதி கேட்கவில்லை. மாறாக, இரண்டே நிமிடத்தில் வழக்கை ரெகுலர் பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டு விட்டு போய் விட்டார்.
விசேஷ அமர்வு
கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு தற்போது தசரா விடுமுறை என்றாலும் கூட, தலைமை நீதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் ஜெயலலிதா தரப்புக்காக விசேஷமாக இன்றைய விசாரணை அமர்வு நடந்தது.
7ம் தேதி வரை வெளியே வர முடியாது
இதன் காரணமாக அக்டோபர் 7ம் தேதி வரை ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று முதலே குழப்பம்
முன்னதாக நேற்று இந்த மனுக்கள் நீதிபதி ரத்னகலா முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பில் முறைப்படியான வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகியிருக்கவில்லை. மாறாக சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராக வாதாடி வந்த பவானி சிங் ஆஜராகியிருந்தார். அவர் நீதிபதி ரத்னகலாவிடம், என்னை இந்தப் புதிய வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமித்திருப்பதாக எந்த தகவலும் எனக்கு முறைப்படி வரவில்லை. எனவே இதில் நான் ஆஜராகி எனது எதிர்ப்புகளைப் பதிவு செய்ய முடியாது என்று கூறினார். இதையடுத்தே நீதிபதி ரத்னகலா அரசு வழக்கறிஞர் நியமிக்கட்டும் என்று கூறி அக்டோபர் 6ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
அவசர மனு தாக்கல்
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா தரப்பு உடனடியாக உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தேசாயை அணுகியது. அவரிடம், இந்த வழக்கைப் பொறுத்தவரை அரசு வழக்கறிஞர் இல்லாமலேயே கூட விசாரணை நடத்தலாம் என்பதை சட்ட விவரத்துடன் எடுத்துக் கூறி உடனடியாக இதை விசாரிக்க வகை செய்யுமாறு கோரிக்கை விடுத்தது.
தலையிட்ட தலைமை நீதிபதி வகேலா
இதையடுத்து தலைமை நீதிபதி டி.எச். வகேலாவைத் தொடர்பு கொண்டார் பதிவாளர் ஜெனரல். அவரது அறிவுறுத்தலின் பேரில் இந்த மனுக்கள் புதன்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அரசு வழக்கறிஞர் இல்லாமலேயே விசாரணை நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது.
ராம்ஜேத்மலானி ஆஜர்
இந்த நிலையில் நேற்று இரவு பவானி சிங்கின் நியமன உத்தரவு அவசரம் அவசரமாக அவரிடம் தரப்பட்டது. இதையடுத்து இன்று விசாரணை நடந்தது. ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி ஆஜரானார். ஜாமீன் மனு விசாரணையைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான வக்கீல்களும், அதிமுக தொண்டர்களும் உயர்நீதிமன்ற வளாகத்தில் குவிந்து விட்டனர்.
மின்னல் வேக விசாரணை
விசாரணை தொடங்கியதுமே பவானி சிங்கைப் பார்த்து நீங்கள் ஆட்சேபனையை பதிவு செய்கிறீர்களா என்று கேட்டார் நீதிபதி ரத்னகலா. அவரும் தாக்கல் செய்வதாக கூறினார். அதில் அவர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க, வழக்கமாக அரசு வக்கீல்கள் தெரிவிக்கும் ஆட்சேபனையைத் தெரிவித்திருந்தார். ஆனால் அதை நீதிபதி பார்க்கக் கூட இல்லை. மாறாக, விசாரணையை அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்து விட்டார். அக்டோபர் 6ம் தேதி பக்ரீத் விடுமுறையாகும். இதனால் அன்று விசாரணை நடைபெற முடியாத நிலை.
அக்டோபர் 7ம் தேதி வரை ஜெயில்தான்
இதன் காரணமாக அக்டோபர் 7ம் தேதி வரை ஜெயலலிதா சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
2 நிமிடங்களில் விசாரணை முடிந்தது
இன்று ஜெயலலிதா உள்ளிட்டோரின் மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது வெறும் 2 நிமிடங்களிலேயே அது முடிந்து போனது குறிப்பிடத்தக்கது.
5வது நாளாக சிறையில் ஜெயலலிதா
ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் 5 நாட்களாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.