ஜெயலலிதாவுக்கு ஜாமீன் தருவதை எதிர்ப்பேன்... பவானி சிங்
பெங்களூர்: கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் தரக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிப்பேன் என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங் கூறியுள்ளார்.
பவானி சிங்தான், பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிராக வாதாடிய அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆவார்.
தற்போது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மனு செய்துள்ளனர். இதுகுறித்து பவானி சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு சார்பில் ஆஜராகி வாதாடினேன். இந்த வழக்கில் சாட்சிகள் பலமாக இருந்ததால் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்தது.
அவருக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்தது சரியே. காரணம் இந்த வழக்கில் தொடர்புடைய சொத்துகளின் இன்றைய மதிப்பு அதைவிட அதிகமாக உள்ளது. அதன் அடிப்படையில் இந்த அபராதம் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு முழு விவரங்கள் எனக்கு கிடைக்கவில்லை. அது மொத்தம் 1,136 பக்கங்களை கொண்டுள்ளது. தீர்ப்பு நகல் வழங்குமாறு கேட்டு விண்ணப்பித்து உள்ளேன். அது கிடைத்ததும் தீர்ப்பை முழுவதுமாக படிப்பேன். ஜெயலலிதா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக அறிந்தேன். அது பற்றி எனக்கு எந்த நோட்டீசும் வரவில்லை.
ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று நான் எதிர்ப்பு தெரிவிப்பேன். தீர்ப்பு நகல் கிடைத்த பிறகு அதை முழுவதுமாக படித்த பிறகே நீதிமன்றத்தி்ல் எனது கருத்தை தெரிவிப்பேன். தீர்ப்பை படிக்க குறைந்தது 3 நாட்கள் ஆகும் என்று பவானி சிங் கூறியுள்ளார்.