வீட்டு வாசலில் பெண்ணைக் கொடூரமாகத் தாக்கிய லக்னோ பேராசிரியர்... தட்டிக் கேட்காத மக்கள்!
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் பெண் ஒருவர் பல்கலைக்கழக பேராசிரியரால் கடுமையாக தாக்கப்படும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேசம் பெண்களுக்கெதிரான வன்முறைகளில் தொடர்ந்து ஊடகங்களுக்கு செய்தியளித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், இம்முறை பிரச்சினையில் சிக்கியிருப்பது நன்கு படித்து மற்றவர்களுக்கு நல்வழியைப் போதிக்க வேண்டிய பேராசிரியர் என்பது தான் பேரதிர்ச்சி தரும் விஷயம்.
சமீபகாலமாக பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை உத்திரப்பிரதேசத்தில் அதிகரித்துக் காணப்படுகிறது. இம்முறை பலர் முன்னிலையில் பெண் ஒருவர் பேராசிரியரால் கடுமையாகத் தாக்கப் படும் காட்சிகள் புகைப்படத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பாஜக தொண்டர்...
லக்னோ பாஜக தொண்டரும், பனாரஸ் இந்துப் பல்கலைக்கழக பேராசிரியருமான ஒருவர் வாரணாசியிலுள்ள தனது வீட்டு வாசலில் பெண் ஒருவரைக் கடுமையாகத் தாக்குகிறார்.
பேயினும் மேலானவர்கள்...
பலர் முன்னிலையில் நிகழும் இந்த அக்கிரமத்தைத் தட்டிக் கேட்பாரில்லை. பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள், ஆனால் இத்தாக்குதலைப் பார்ப்பவர்களோ அதனினும் மேலாக உறைந்து போய் வேடிக்கைப் பார்க்கிறார்கள்.
புகைப்படங்களாக பதிவு...
ஆனால், தட்டிக் கேட்காவிட்டாலும் நடந்த அக்கிரமத்தை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் விதமாக இந்தச் சம்பவம் புகைப்படங்களாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
டுவிட்டர் பக்கத்தில்...
இந்தப் புகைப்படங்களை கன்சன் குப்தா என்ற மூத்தப் பத்திரிக்கையாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கோடூரத் தாக்குதல்...
அதில், வீட்டிலிருந்து கொடூரமாக தாக்கப்பட்டு வெளியே இழுத்து வரப்படும் பெண் ஒருவர் பலர் முன்னிலையில் பலமாகத் தாக்கப்படும் புகைப்படங்களாக வெளியிடப்பட்டுள்ளது. இவை பார்ப்பவரை ஒரு கணம் அதிர்ச்சியடைய வைப்பதாக அமைந்துள்ளது.