மோடிக்கு ஆதரவு தர மறுத்தது “ஷெனாய்” மேதை பிஸ்மில்லா கான் குடும்பம்
வாரணாசி: புகழ்பெற்ற "ஷெனாய்" வாத்திய கலைஞரான பிஸ்மில்லாகானின் குடும்பத்தினர் லோக்சபா தேர்தலில் மோடிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட மறுப்பு தெரிவித்துள்ளனர். சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்ய இயலாது என்று அவர்கள் தெரிவித்து விட்டதாக கூறப்படுகின்றது.
பாஜக கட்சி கானின் குடும்பத்தை தேர்தலில் மோடிக்கு ஆதரவு அளிக்க அணுகியதாகவும், ஆனால் அவர்கள் மறுத்து விட்டதாகவும் சில உள்ளூர் செய்திகள் கூறி வருகின்றன.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பிஸ்மில்லா கானின் மகனான ஜமின் ஹுசேன் பிஸ்மில்லா கூறுகையில், "பாஜகவினர் எங்களை அழைத்தது உண்மைதான்.அதற்காக நாங்கள் சில முடிவுகளும் எடுத்திருந்தோம்.ஆனால்,அவர்கள் கச்சேரிக்கு அழைக்காமல், மோடிக்கு ஆதரவு அளிக்க கூறியதால் நாங்கள் அதனை மறுத்து விட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "நாங்கள் இசைக்கு மட்டுமே சொந்தமானவர்கள்.எந்த தேர்தல் பிரச்சாரத்திலும் இதுவரை எங்கள் குடும்பம் ஈடுபட்டதில்லை" என்று கூறியுள்ளார்.
"அரசியல் கட்சிகள் கானின் நினைவாக இங்கு வரவில்லை.அவர்கள் வோட்டுக்காக மட்டும்தான் வந்துள்ளனர்.இதில் மிகவும் வருத்தமான செய்தி என்னவெனில் 8 வருடங்கள் ஆகியும் அந்த புகழ்பெற்ற இசைமேதையின் நினைவாக எந்த நினைவிடமும் அமைக்கப்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை" என்று கூறியுள்ளார் ஹைதர்.