நான் சர்வாதிகாரியாக இருந்தால்... பகவத் கீதை பற்றிய உச்சநீதிமன்ற நீதிபதி கருத்தால் காங், பாஜக மோதல்
பாரம்பரிய வாழ்க்கை வேண்டும்
குஜராத் சட்ட அமைப் பின் சார்பில் அகமதாபாத்தில் நேற்று நடந்த 'உலக மயமாக்கலால் சந்திக்கும் பிரச்னைகள், மனித உரிமை சவால்கள்' என்ற தலைப்பிலான கருத்தரங்கில் நீதிபதி தாவே பேசியதாவது:
தற்போது பல்வேறு நாடுகளில் தீவிரவாதத்தை நாம் பார்க்கிறோம். அதில் பெரும்பாலான நாடுகள் ஜனநாயக நாடுகள். அதனால் அனைவரிடமும் நல்ல சிந்தனைகளை, எண்ணங்களை, செய்கைகளை கொண்டு வர வேண்டும். இதன் மூலம் வன்முறை, தீவிரவாதத்தை தடுக்க முடியும். அதற்கு நாம் நம்முடைய பாரம்பரிய வாழ்க்கை முறைக்கு செல்ல வேண்டும்.
பகவத் கீதை, மகாபாரதம்
நமது பாரம்பரியமான குரு-சிஷ்யன் முறை தொடர்ந்து இருந்தால், வன்முறை, தீவிரவாதம் போன்ற பிரச்னை ஏற்பட்டிருக்காது. நான் சர்வாதிகாரியாக இருந்தால், பகவத் கீதை, மகாபாரதம் போன்றவற்றை பள்ளிகளில் முதல் வகுப்பிலேயே கட்டாய பாடமாக அறிவித்து இருப்பேன்.
இது மதவாதமோ, மதசார்ப்பின்மையோ அல்ல. இவற்றின் மூலம்தான் வாழ்க்கையை நாம் தெரிந்து கொள்ள முடியும். மிகச் சிறந்தது எங்கிருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு தாவே தெரிவித்தார்.
தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரசின் செய்தி தொடர்பாளர் ரஷித் ஆல்வி, முதல் வகுப்பில் பகவத் கீதையை பாடமாக வைத்தால் மாணவர்களுக்கு புரிந்துகொள்ள முடியாது. எனவே நீதிபதி பேசியதில் நடைமுறை குழறுபடி உள்ளது. ஒரு மதப்பிரிவுக்கு ஆதரவாக நீதிபதி தாவே, பேசியுள்ளதால், தாவே வழங்கியுள்ள தீர்ப்புகளை மீண்டும் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டியது அவசியம் என்றார்.
காங்கிரஸ்தான் பரிசீலனை செய்ய வேண்டும்
ஆனால் நீதிபதியின் கருத்தை வரவேற்றுள்ள பாஜகவோ, ரஷித் ஆல்வியை, செய்தித்தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்க காங்கிரஸ் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. பாஜகவின் நளின் கோஹ்லி இவ்வாறு தெரிவித்தார்.
மதசாயம் பூசாதீர்கள்
பாஜகவின் மற்றொரு தலைவர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், "நமது பாரம்பரியம் நல்ல ஒழுக்கத்தை கற்றுக்கொடுத்ததை யாராலும் மறுக்க முடியாது. நீதிபதியின் பேச்சை மதசாயத்துடன் பார்க்க கூடாது என்றார்.