சிவசேனாவுடனான கூட்டணியில் இழுபறி- டெல்லியில் பாஜக அவசர ஆலோசனை!
டெல்லி: மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா இடையேயான தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதால் டெல்லியில் பாஜக மூத்த தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை நடத்தினர்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு வருகிற அக்டோபர் மாதம் 15ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அங்கு 15 ஆண்டுகளாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இதற்கு முன் மகாராஷ்டிராவில் சிவசேனா-பா.ஜனதா கூட்டணி 1995ஆம் ஆண்டு ஒரு முறை ஆட்சியைப் பிடித்தது. அப்போது சிவசேனா தலைமையில் ஆட்சி அமைந்தது. அந்த கட்சியைச் சேர்ந்த மனோகர் ஜோஷி முதல்வராக இருந்தார். அப்போது சிவசேனாதான் அதிக தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.
அதிக தொகுதி கேட்கும் பாஜக
லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா பெருவாரியான வெற்றி கிடைத்துள்ளதால் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிடவும், முதல்வர் வேட்பாளரை நிறுத்தவும் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
தலா 135
தொகுதி பங்கீடு தொடர்பாக இருகட்சித் தலைவர்கள் இடையே மும்பையில் பலகட்டமாக பேச்சு வார்த்தை நடந்தது. மொத்தம் உள்ள 288 இடங்களில் 270 தொகுதிகளில் இரு கட்சிகளும் சரிசமமாக போட்டியிடுவது மீதம் உள்ள 18 இடங்களை கூட்டணியில் உள்ள ராமதாஸ் அதாவலே தலைமையிலான இந்தியக் குடியரசு கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்பது பாஜகவின் திட்டம்.
தனித்துப் போட்டி?
இதை ஏற்க சிவசேனா மறுத்துவிட்டது. இதனால் கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கூட்டணியில் உடன்பாடு ஏற்படாவிட்டால் தனித்து போட்டியிட தயங்க மாட்டோம் என சிவசேனா கட்சி மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
உத்தவ் தாக்கரே திட்டவட்டம்
இதுபற்றி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், தலா 135 இடங்களில் போட்டியிடும் திட்டத்தை பாரதிய ஜனதா முன் வைத்தது. அதை நாங்கள் ஏற்கவில்லை. நிராகரித்து விட்டோம். ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு மாற்று வழி உள்ளது. எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்ற விஷயத்தில் என்னால் ஒரு அளவுக்கு மேல் செல்ல முடியாது. இதை பாரதிய ஜனதாவிடம் தெரிவித்துவிட்டேன் என்றார்.
விட்டுக் கொடுக்கும் பாஜக?
சிவசேனா இப்படி தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. தேவைப்பட்டால் தனித்து போட்டியிடுவோம் என்பதைத் தான் மாற்றுவழி என்று உத்தவ் தாக்கரே மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். இதனால் பாரதிய ஜனதா தனது திட்டத்தை விட்டுக் கொடுக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
டெல்லியில் ஆலோசனை
இந்த நிலையில் கூட்டணி சிக்கலுக்கு முடிவு காண்பதற்காக பாரதிய ஜனதாவின் உயர்மட்டக்குழு கூட்டம் இன்று காலை டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின்கட்காரி வீட்டில் நடைபெற்றது. இதில் தொகுதி பங்கீட்டில் சிவசேனா பிடிவாதம் பிடிப்பதால் மாற்று திட்டம் பற்றி ஆலோசிக்கப்பட்டது.