ஹரியானா சட்டசபை தேர்தல்: பாஜக வென்றால் சுஷ்மா ஸ்வராஜ் தங்கை வந்தனா சர்மா முதல்வர்?
சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றால் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் தங்கை வந்தனா சர்மா முதல்வராகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் அக்டோபர் 15-ந் தேதி நடைபெற உள்ளது. ஹரியானாவில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
பல முனைப் போட்டி
இத்தேர்தலில் காங்கிரஸ், பாஜக, இந்திய தேசிய லோக் தள், ஹரியானா லோகித் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ஹரியானா ஜாஹித் காங்கிரஸ்- ஜன் சேட்னா மஞ்ச் கூட்டணி ஆகியவை களத்தில் இருக்கின்றன. இதனால் இம்மாநிலத்தில் பல முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
கட்சி தாவல்கள்
காங்கிரஸ், பாஜக உள்ளிட்டவை வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகின்றன. இதில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் கட்சி மாறிக் கொண்டிருப்பதும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
காங்கிரஸ் நம்பிக்கை
காங்கிரஸைப் பொறுத்தவரையில் முதல்வர் பூபீந்தர்சிங் ஹூடா 3வது முறையாக ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார். ஆனால் மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் ஹூடாவை எதிர்த்து பாஜகவுக்குப் போய் சேர்ந்துவிட்டனர். இதனால் 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
ஒதுங்கிய ஆம் ஆத்மி
இம்மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு செல்வாக்கு இருப்பதாக கூறப்பட்டாலும் தற்போதைய தேர்தலில் கவனம் செலுத்தவில்லை.
மோடி அலையை நம்பும் பாஜக
பாரதிய ஜனதாவுக்கு தனிப்பட்ட முகம் எதுவும் இம்மாநிலத்தில் இல்லை. மோடி அலையை நம்பித்தான் களத்தில் நிற்கிறது. பாஜக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் தங்கை வந்தனா சர்மாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. அவரைத் தவிர பிரபலமானவர்கள் யாரும் பாஜக பட்டியலில் இல்லை.
வந்தனா சர்மா முதல்வர்?
இதனால் ஒருவேளை பாரதிய ஜனதா வென்று ஆட்சி அமைந்தால் அனேகம் வந்தனா சர்மாவைத்தான் முதல்வராக்க வாய்ப்பிருக்கிறது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.