உடனுக்குடன் தகவல் பரிமாற்றம்: எம்.பி.க்களுக்காக வாட்ஸ்ஆப் குரூப் துவங்கிய பாஜக
டெல்லி: பாஜகவைச் சேர்ந்த 323 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி குறித்த தகவல்களை பெற அமைக்கப்பட்ட வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாஜக தனது கட்சியைச் சேர்ந்த 323 நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியின் வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர்த்துள்ளது. இந்த குரூப் புதன்கிழமை உருவாக்கப்பட்டது. இந்த குரூப் மூலம் எம்.பி.க்கள் கட்சி தொடர்பான தகவல்களை பெறலாம். ஆனால் யாரும் ஜோக்ஸுகளை பரிமாறிக்கொள்ளக் கூடாது.
மேலும் எம்.பி.க்கள் பாஜக வாட்ஸ்ஆப் குரூப்பில் என்ன செய்கிறார்கள் என்பது கட்சியின் நாடாளுமன்ற அலுவலகத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்படும். பிரதமர் நரேந்திர மோடி ஃபேஸ்புக், ட்விட்டரில் தான் செய்யும் செயல்கள் குறித்து அவ்வப்போது தெரிவித்து வருகிறார்.
தன்னை போன்றே கட்சியினரும் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
எம்.பி.க்கள் சமூக வலைதளங்களை தாராளமாக பயன்படுத்தலாம் என்று மோடி தெரிவித்துள்ளார். இதற்கிடையே நாடாளுமன்ற விவாதத்தின்போது எத்தனை பேர் அதில் கலந்து கொண்டீர்கள், எத்தனை பேர் கேள்வி எழுப்பினீர்கள் என்று மோடி 31 பாஜக எம்.பி.க்களிடம் புதன்கிழமை கேட்டார். அதற்கு 12 பேர் கையை தூக்கினர். இதை பார்த்த மோடி அனைவரும் நாடாளுமன்ற செயல்பாடுகளில் பங்கேற்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.