அத்வானிக்கு அவமரியாதை.. அவரது சகாப்தம் முடிந்துவிட வில்லை: பாஜக மீது பாயும் சிவசேனா!
மும்பை: பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் அத்வானியை அவமதிக்கிறது.. அவரது சகாப்தம் ஒன்றும் முடிந்து போய்விட வில்லை என்று அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா கடும் காட்டமாக தாக்குதல் தொடுத்துள்ளது.
சிவசேனாவின் நாளேடான சாம்னாவில் இன்று அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, அத்வானி குறித்து எழுதியிருப்பதாவது:
பாரதிய ஜனதாவில் நரேந்திர மோடியின் சகாப்தம் தொடங்கிவிட்டது. ஆனால் அதற்காக அத்வானியின் சகாப்தம் முடிந்து போய்விட்ட ஒன்றாகிவிட்டது என்று அர்த்தம் இல்லை.
லோக்சபா தேர்தலுக்கான பாஜகவின் முதலாவது வேட்பாளர் பட்டியலில்தான் அத்வானி பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் அத்வானி தாம் விரும்பும் தொகுதியில் போட்டியிட முடியாமல் தடுக்கப்பட்டுள்ளார்.
அத்வானி போட்டியிடும் தொகுதி குறித்து முடிவெடுக்க பாஜகவுக்கு அப்படி என்ன தயக்கம்? அது அவரை அவமதிப்பதாகும். வாரணாசியில் மோடி போட்டியிடுவதால் முரளி மனோகர் ஜோஷி கான்பூரில் போட்டியிட விரும்புகிறார்.
பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கும் பாதுகாப்பாக காசியாபாத்துக்கு பதிலாக லக்னோவில் போட்டியிடுகிறார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சித்துவை ஓரங்கட்டிவிட்டு அருண் ஜேட்லி போட்டியிடுகிறார். அப்படியான நிலையில் அத்வானி விவகாரத்தில் மட்டும் ஏன் தாமதம்?
ஒருவர் தலையெடுத்துவிட்டதாலேயே மற்றொவரது அத்தியாயம் முடிந்துவிட்டதாகிவிடாது.
இவ்வாறு உத்தவ்தாக்கரே கூறியுள்ளார்.