"கலவரங்களை அடக்க குஜராத் மாடல்தான் சரியானது": பாஜக நிர்வாகி கருத்தால் சர்ச்சை
பெங்களூர்: குஜராத் மாடலில் கலவரத்தை ஒதுக்குவதுதான் சரியான நடைமுறையாக இருக்கும் என்று கர்நாடக மாநில பாஜக பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏவுமான சி.டி.ரவி கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக உயர் கல்வி துறை அமைச்சராக பதவி வகித்தவர் சி.டி.ரவி. இம்மாநிலத்தின் பாஜ பொதுச்செயலாளராகவும், எம்.எல்.ஏவாகவும் உள்ளார். இவர் ஞாயிற்றுக்கிழமை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் சஹரன்பூர் பகுதியில் நடந்த கலவரம் தொடர்பாக டிவிட் வெளியிட்ட ரவி "2002 முதல் கலவரக்காரர்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கும் குஜராத் மாடலால் மட்டுமே, இதுபோன்ற கலவரங்களை கட்டுப்படுத்த முடியும். அந்த மாடலைத்தான் இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்ல வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்கு நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் ஷெஜாத் பூனவாலா, இதுகுறித்து தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். சஹரன்பூரில் நிலைமை இன்னும் மேம்படாத நிலையில், சி.டி.ரவி வெளியிட்டுள்ள கருத்து, தேவையற்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரவி "குஜராத்தில் 2002க்கு பிறகு மத கலவரங்களே நடைபெறாத நிலையில், உத்தர பிரதேசத்தில் அவ்வப்போது இதுபோன்ற கலவரங்கள் நடைபெறுகின்றது. எனவேதான் குஜராத்தை போல கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை" என்றார்.