மோடியின் முஸ்லிம்கள் குறித்த கருத்தால் சிலிர்த்துப் போனேன்: மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா
டெல்லி: இந்திய முஸ்லிம்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறிய கருத்துக்கு இஸ்லாமிய தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த மோடி, இந்திய முஸ்லீம்களின் தேசப்பற்று குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது. அவர்கள் இந்தியாவுக்காகவே வாழ்ந்து, இந்தியாவுக்காகவே உயிர் துறப்பார்கள்.
இந்திய முஸ்லீம்கள் தங்களது தாளத்திற்கு ஏற்ப ஆடுவார்கள் என அல் காய்தா இயக்கம் தவறான எண்ணத்தை கொண்டுள்ளது" எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் மோடியின் இந்த கருத்துக்கு இஸ்லாமிய தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மத்திய சிறுபான்மைத் துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா:
- பிரதமரின் பேட்டியை பார்த்து சிலிர்த்துப் போனேன்.
- மோடியின் இந்த கருத்து இஸ்லாமிய இளைஞர்கள், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் பக்கம் சாய்வதையும், அல் காய்தாவின் வலையில் வீழ்வதையும் தடுக்கும்.
- எதிர்க்கட்சியினரும், மோடியை விமர்சிப்பவர்களும் இன்னமும் அவரை இஸ்லாமியர்களுக்கு எதிரானவராக சித்தரித்தால் அது நகைப்புக்குரியதாகத்தான் இருக்கும்
இஸ்லாமிய மதகுரு முப்தி முக்காராம்:
- பிரதமர் மோடியின் இந்த கருத்தை நாங்கள் வரவேற்கிறோம்.
- எங்களை ஜிகாத் விரும்பிகள் என்று குற்றம் சாட்டுபவர்களுக்கும், பிளவை ஏற்படுத்த முயற்சிப்பவர்களுக்கும் பிரதமரின் இந்த கருத்து சரியான பதிலாக இருக்கும்
பாரதிய ஜனதாவின் ஷா நவாஸ் உசேன்:
- சிறுபான்மையினர் மீதான பாஜகவின் எண்ணத்தையே மோடி வெளிப்படுத்தியுள்ளார்.
- மோடியின் இந்த கருத்து முற்றிலும் சிறப்பாக உள்ளது.
- இந்திய முஸ்லிம்கள் எப்பொழுதுமே தேசத்திற்காக வாழ்ந்து உயிர் துறப்பவர்கள். கார்கில் போரில் கூட அதனை நாம் கண்டோம்
விமர்சனம்
ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்தீப் தீட்சித், இந்திய முஸ்லிம்களுக்கு யாரிடமிருந்தும் நற்சான்றிதழ் தேவையில்லை. - அமெரிக்கா விசா பெறுவதில் மிகவும் ஆர்வமாக இருந்த மோடி, தற்போது அமெரிக்கா செல்ல இருப்பதால் இப்படி கூறுகிறார் என விமர்சித்துள்ளார்.