சாப்ட்வேர் என்ஜீனியர் பலாத்காரம்.. ஹைதராபாத்தில் பாஜகவினர் போராட்டம்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் சாப்ட்வேர் என்ஜீனியர் ஒருவர் 2 டாக்சி டிரைவர்களால் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட செயலைக் கண்டித்து ஹைதராபாத்தில், ஆந்திர மாநில அரசு தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹைதராபாத்தில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 22 வயது சாப்ட்வேர் என்ஜீனியர் 2 டிரைவர்களால் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
கிட்டத்தட்ட 6 மணி நேரம் அந்தக் கொடியவர்கள் கையில் சிக்கித் தவித்துள்ளார் அப்பெண். இரண்டு டிரைவர்களும் தற்போது கைது செய்யப்பட்டு விட்டனர்.
பாஜக போராட்டம்
இந்த செயலைக் கண்டித்து ஹைதராபாத்தில் பாஜகவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தலைமைச் செயலகம் முற்றுகை
ஆந்திர மாநில தலைமைச் செயலகத்தை அவர்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கேட்டில் ஏறி நுழைய முயற்சி
போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்களும், பெண்களும் போலீஸாரின் தடுப்பை மீறி ஆவேசமாக தலைமைச் செயலகத்திற்குள் நுழைய முயன்றனர்.
பெரும் தள்ளுமுள்ளு
இரும்பு கேட் மீது ஆண்களும், அவர்களுக்குப் போட்டியாக பெண்களும் ஏறிக் குதிக்க முயன்றதால் பரபரப்பு கூடியது. போலீஸாரும் அவர்கள் பின்னாலேயே ஏறி கீழே இறக்கி விட்டனர்.
குண்டுக்கட்டாக வெளியேற்றம்
போராட்டக்காரர்களை போலீஸார் பெரும் சிரமப்பட்டு குண்டுக்கட்டாக தூக்கி அங்கிருந்து வேன் மூலம் அப்புறப்படுத்தினர்.
போலீஸார் பாஜகவினரின் தலைமைச் செயலகத்திற்குள் நுழையும் போராட்டத்தை தடுத்து அனைவரையும் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்திய பின்னரே அமைதி திரும்பியது.