மோடி அரசை விமர்சித்து மாணவர்களுக்கு மெயில் அனுப்பிய செயின்ட் சேவியர் கல்லூரி முதல்வர்
மும்பை: நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசை விமர்சித்து மாணவர்களுக்கு இ மெயில் அனுப்பிய மும்பை செயின்ட் சேசியர் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் கொடுத்துள்ளது.
நாட்டின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியின் முதல்வர் மாணவர்களுக்கு லோக்சபா தேர்தல் தொடர்பாக அனுப்பியுள்ள இ மெயிலில், மோடியின் குஜராத் அரசை விமர்சித்திருக்கிறார். அத்துடன் இது அந்த கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் பதிவிடப்பட்டிருக்கிறது.
மேலும் மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்கு மதவாத சக்திகளால் ஆபத்து இருப்பதையும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. இதற்கு பாரதிய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மும்பையில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் அக்கல்லூரி முதல்வர் அறிக்கை தேர்தல் விதிமுறையை மீறுவதாக இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் பாரதிய ஜனதா புகார் தெரிவித்துள்ளது.
ஆனால் கல்லூரி முதல்வரோ, மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டியது எங்கள் கடமை. அவர்களை வாக்களிக்க செய்ய வேண்டியதும் எங்கள் பொறுப்பு. அதனடிப்படையில்தான் இதனை செய்தோம் இதில் தவறேதுமில்லை என்றார்.