பாஜக தேர்தல் அறிக்கையில் அயோத்தி ராமர் கோயில், காஷ்மீருக்கு அந்தஸ்து தரும் பிரிவு -370 நீக்கம்!!
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை ஒருவழியாக வெளியிடப்பட்டுவிட்டது. அரசியல் சாசனத்துகுட்பட்ட வகையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சாசனப் பிரிவு நீக்கப்படும் என பாஜகா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கை டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
மத்திய- மாநில அரசுகளிடையே வலுவான நல்லுறவு ஏற்படுத்துவோம்; அனைத்து அதிகாரப் பரவலாக்கலுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்
அரசிய சாசனத்துக்குட்பட்டு அயோத்தியில் ராமர்கோயில் கட்டப்படும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்வோம்
சில்லறை வர்த்தகத்தை தவிர இதர துறைகளில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுப்போம். வெளிநாட்டில் பதுக்கப்பட்ட கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
முதலீட்டாளர்களை ஈர்க்க வரிநடைமுறைகள் எளிதாக்கப்படும். தெலுங்கானா, சீமாந்திரா மேம்பாட்டுக்கு கவனம் செலுத்தப்படும்
100 புதிய நகரங்கள், இரட்டை நகரங்கள், செயற்கைக் கோள் நகரங்கள் அமைக்கப்படும். கல்வி, தொழில்துறையில் சிறுபான்மையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்படும்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவை நீக்குவோம். ராமர் பாலம் மற்றும் தோரியம் கனிமவளத்தை கவனத்தில் கொண்டு சேது கால்வாய் திட்டம் பற்றி முடிவு மேற்கொள்வோம்.
பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்த பொதுசிவில் சட்டம் உருவாக்கப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.