உ.பி.யில் மரத்தில் பிணமாகத் தொங்கிய 16 வயது சிறுமி: பலாத்காரம் செய்து கொலை?
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் 16 வயது சிறுமி காட்டுப் பகுதியில் உள்ள மரத்தில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பதேஹ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜபாத்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி செவ்வாய்க்கிழமை அன்று வெளியே சென்றுள்ளார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த அவரின் குடும்பத்தார் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.
இந்நிலையில் சிறுமி அங்குள்ள காட்டுப் பகுதியில் மரத்தில் பிணமாகத் தொங்கியதை போலீசார் புதன்கிழமை காலை கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் குறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தான் மரத்தில் தொங்கவிடப்பட்டிருக்க வேண்டும் என்று அவரின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். முன்னதாக பதாவ்னில் சகோதரிகள் இருவர் பலாத்காரம் செய்யப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.