ஃபேஸ்புக்கில் வார்னிங்.. கல்யாண மண்டபத்தில் மணப்பெண்ணை சுட்டுக்கொன்ற அத்தை மகன்!!
போபால்: ஒரு தலைக்காதலால் மணக்கோலத்தில் இருந்த பெண் மருத்துவரை அத்தையின் மகன் சுட்டுக்கொன்ற சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நிகழ்ந்துள்ளது.
மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் உள்ள காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவராக பணியாற்றி வந்தவர் ஜெய்ஸ்ரீ. இவருக்கும், அதே மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றும் ரோகித் நாம்தியோவிற்கும் கடந்த பிப்ரவரி 3ந் தேதி திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து இருவருக்கும் கடந்த 8ந் தேதி திருமண ஏற்பாடு நடந்தது. அப்போது, மணமேடையை நோக்கி வந்த ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் மணப்பெண் ஜெய்ஸ்ரீயை சரமாரியாக சுட்டான். இதில் ஜெய்ஸ்ரீ அதே இடத்தில் உயிரிழந்தார்.
மணமகன் நாம்தியோவைவும் அந்த வாலிபர் சுட முயன்றான். சுதாரித்துக் கொண்ட நாம்தியோ, வாலிபரின் கைகளை மடக்கியதால் திருமணத்திற்கு வந்த விருந்தாளி ஒருவர் மீது பாய்ந்தது. ஜெய்ஸ்ரீயை துப்பாக்கியால் சுட்டவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவத்தால் திருமண மண்டபமே அதிர்ச்சியில் உறைந்துபோனது. ஜெய்ஸ்ரீயை சுட்டுக் கொன்றவர் மணப்பெண்ணின் அத்தை மகன் அனுராக் சிங். போபாலில் உள்ள தனியார் வங்கியில் 2012ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்த அவன், ஜெய்ஸ்ரீயின் மீது ஒருதலைக்காதலாக இருந்துள்ளான்.
ஆனால் அந்த காதலை ஜெய்ஸ்ரீ ஏற்கவில்லை. இந்நிலையில் ஜெய்ஸ்ரீக்கும், நாம்தியோவிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இருவரும் ஜோடியாக இருக்கும் படங்களை தங்களது பேஸ்புக்கில் வெளியிட்டனர்.
இதில் கடுப்பாகிப் போன அனுராக், நாட்டுத் துப்பாக்கியுடன் காட்சியளிக்கும் தனது புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டு, காத்திருந்து பாருங்கள் என்று எழுதி அதனை சிவப்பு நிற அடிக்கோடிட்டு காட்டி இருந்தான்.
அவன் திட்டமிடபடியே மணக்கோலத்தில் இருந்த ஜெய்ஸ்ரீயை கல்யாண மண்டபத்தில் வைத்து படுகொலை செய்திருக்கிறான்.