இடைத்தேர்தல்: 10 மாநிலங்களில் காங்கிரசுக்கு கிடைத்ததும், கோட்டைகளில் பாஜக கோட்டை விட்டதும்!
டெல்லி: மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவுக்கு பேரிடியாக 10 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் அமைந்துவிட்டன. மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜகவுக்கு இது கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
உத்தரபிரதேசம், குஜராத், மேற்குவங்கம், ராஜஸ்தான், அஸ்ஸாம், ஆந்திரா, சிக்கிம், திரிபுரா உள்ளிட்ட 10 மாநிலங்களில் காலியாக இருந்த 33 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 13-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
உத்தரபிரதேசம்
உத்தரபிரதேசத்தில் 11 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஆளும் சமாஜ்வாடி 8 இடங்களைக் கைப்பற்றியது. பாரதிய ஜனதாவுக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைத்தன. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இன்னொரு முக்கிய எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ் இடைத்தேர்தலைப் புறக்கணித்தது.
8 ஐ பறிகொடுத்த பாஜக
இவற்றில் பிஜ்னூர், தாக்கூர்துவாரா, நிகாசன், ஹமிர்பூர், சர்க்காரி, சிராத்து, பால்ஹா, ரொகானியா ஆகிய 8 தொகுதிகளை பாரதிய ஜனதாவிடம் இருந்து சமாஜ்வாடி கைப்பற்றியது.
வாரணாசிக்குட்பட்ட தொகுதியிலும் தோல்வி
அதுவும் பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்ற வாரணாசி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ரொகானியா சட்டசபை தொகுதியில் பாரதிய ஜனதாவின் கூட்டணி கட்சியான அப்னா தளம் போட்டியிட்டது. அக்கட்சியின் வேட்பாளர் சமாஜ்வாடி வேட்பாளரிடம் தோல்வி கண்டார்.
இந்த 3தான்
சகரன்பூர் நகரம், நொய்டா, லக்னோ கிழக்கு ஆகிய 3 தொகுதிகளில் மட்டுமே பாரதிய ஜனதாவால் வெல்ல முடிந்தது.
பெரும் பின்னடைவு
உத்தரபிரதேசத்தில் தேர்தல் நடந்த 11 சட்டசபை தொகுதிகளும் கடந்த தேர்தலின்போது பாரதிய ஜனதா வசம் இருந்தவை. சர்க்காரி தொகுதியில் கடந்த தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் தற்போதைய மத்திய அமைச்சர் உமா பாரதி வெற்றி பெற்றிருந்தார். கடந்த லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 73-ஐ கைப்பற்றி இருந்த நிலையில் தற்போது படுதோல்வியை சந்தித்திருக்கிறது.
குஜராத்திலும் 'கோட்டை'விட்ட பாஜக
குஜராத்தில் 9 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா 6 இடங்களைத்தான் கைப்பற்றியது. இதில் குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி போட்டியிட்ட மணிநகர் தொகுதியும் ஒன்றாகும். இது தமிழர்கள் அதிகம் உள்ள தொகுதி. இது தவிர லிம்கேடா, தலாஜா, தான்காரா, ஆனந்த் மற்றும் மத்தார் ஆகிய தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றது.
3ஐ பறிகொடுத்த பாஜக
காங்கிரஸ் டீஷா, மாங்க்ரோல், கதாம்பாலியா ஆகிய 3 தொகுதிகளை ஆளும் பாரதிய ஜனதாவிடம் இருந்து கைப்பற்றியது.
ராஜஸ்தானில் படுதோல்வி
இந்த மாநிலத்தில் இடைத்தேர்தல் நடந்த 4 சட்டசபை தொகுதிகளில் 3-ஐ காங்கிரஸ் கைப்பற்றியது. ஒரே இடத்தில் மட்டுமே ஆளும் பாரதிய ஜனதாவுக்கு வெற்றி கிடைத்தது. நசீராபாத், வாயர், சூரஜ்கார் ஆகிய தொகுதிகளை காங்கிரஸ் வென்றது. தெற்கு கோடா தொகுதியில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றது.
மரண அடிதான்..
கடந்த லோக்சபா தேர்தலில் மாநிலத்தில் உள்ள 25 தொகுதிகளையும் பாரதிய ஜனதா கைப்பற்றிய நிலையில் 3 தொகுதிகளை காங்கிரசிடம் இழந்து இருப்பது அக்கட்சிக்கு மரண அடியாகவே கருதப்படுகிறது.
அஸ்ஸாம்
அஸ்ஸாமில் 3 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சி லட்சுமிபூர் தொகுதியை கைப்பற்றியது. சில்சார் தொகுதியில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றது. ஜாமுனாமுக் தொகுதியை எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஏ.ஐ.யு.டி.எப். கட்சியின் வேட்பாளர் ரகீம் அஜ்மல் கைப்பற்றினார்.
மேற்கு வங்காளத்தில் கால்பதித்த பாஜக
மேற்கு வங்க மாநிலத்தில் தக்சிண் பசிர்ஹத், சவுரங்கி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தது. இதில் தக்சிண் பசிர்ஹத் தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் சாமிக் பட்டாச்சாரியா, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரும், பிரபல கால்பந்து வீரருமான தேபேந்து பிஸ்வாசை 1,742 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதன் மூலம் மாநில சட்டசபையில் தனது முதலாவது எம்.எல்.ஏ. கணக்கை பாரதிய ஜனதா தொடங்கி உள்ளது.
திரிணாமுல்
சவுரங்கி தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் நயானா பத்தோபாத்யா, பா.ஜனதா வேட்பாளர் ரிதீஷ் திவாரியை 14,344 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
தெலுங்கு தேசம் கைப்பற்றியது
ஆந்திராவில் நந்திகாமா சட்டசபை தொகுதியை தெலுங்கு தேசம் கைப்பற்றியது. இத்தொகுதியில் ஆளும் தெலுங்கு தேசம் சார்பில் போட்டியிட்ட சாப்ட்வேர் என்ஜினீயரான தங்கிரலா சவுமியா 74,827 ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இவருக்கு 99,748 ஓட்டுகளும், காங்கிரஸ் வேட்பாளர் பொடபதி பாபுராவுக்கு 24,921 ஓட்டுகளும் கிடைத்தன. இங்கு முக்கிய எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் போட்டியிடவில்லை.
இத்தொகுதியின் எம்.எல்.ஏ. வான சவுமியாவின் தந்தை பிரபாகர் மாரடைப்பால் இறந்ததைத் தொடர்ந்து இங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
திரிபுராவில் மார்க்சிஸ்ட் வெற்றி
திரிபுரா மாநிலத்தில் மலைவாழ் மக்களுக்கான பானு தொகுதியில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பிரபாத் சவுத்திரி காங்கிரஸ் வேட்பாளர் மைலாபிரு மோக்கை 15,971 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
சிக்கிமில் ஆளும் கட்சிக்கு தோல்வி
சிக்கிம் மாநிலத்தில் ரங்கிராங்-யாங்காங் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளரும், மாநில முதல்வர் பவான் சாம்லிங்கின் சகோதரருமான ரூப் நாராயண் சாம்லிங், மாநிலத்தை ஆளும் சிக்கிம் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான குமாரி மாங்கரை 708 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
வதோதராவில் பாஜக வெற்றி
வதோதரா லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளர் ரஞ்சன்பென் பாத் 3,29,507 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் நரேந்திர ரவாத்தை தோற்கடித்தார். இத்தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டு வெற்றி பெற்று பின் ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
தெலுங்கானா ராஷ்டிர சமிதி தக்க வைத்தது
இதேபோல் தெலுங்கானா மாநிலம் மேடக் லோக்சபா தொகுதியை சந்திரசேகர ராவின் தெலுங் கானா ராஷ்டிர சமிதி தக்க வைத்துக்கொண்டது. இந்த தொகுதியில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி சார்பில் போட்டியிட்ட பிரபாகர் ரெட்டி 3,61,277 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.
சமாஜ்வாடி வெற்றி
உத்தரபிரதேசத்தின் மைன்புரி லோக்சபா தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் சமாஜ்வாடி சார்பில் போட்டியிட்ட முலாயம்சிங்கின் உறவினர் தேஜ் பிரதாப் சிங் 3 லட்சத்து 30 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதாவின் பிரேம் சிங்கை தோற்கடித்தார். இந்த தொகுதியை சமாஜ்வாடி தக்க வைத்துக்கொண்டது.