கர்நாடகா, பீகார் உள்ளிட்ட நான்கு மாநிலங்களின் 18 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்!
டெல்லி: கர்நாடகா, பீகார், மத்திய பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களிலுள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு அமைதியான முறையில் தொடங்கி நடந்து வருகிறது.
இடைத்தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பீகாரில்தான் அதிகபட்சமாக 10 தொகுதிகள் உள்ளன. இங்கு அரசியலில் பரம எதிரிகளாக இருந்த லாலு பிரசாத் யாதவும், நிதிஷ் குமாரும் கைகோர்த்துள்ளனர்.
இணைந்த கரங்கள்
லோக்சபா தேர்தலின்போது பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 32 தொகுதிகளை பாஜக கூட்டணி வென்றது. எனவே, அரசியல் காழ்ப்புணர்ச்சியை மறந்துவிட்டு லாலுவும், நித்தீஷும் ஒன்றிணைந்துள்ளனர்.
பாஜகவை பார்த்து பயம்?
பல மேடைகளில் லாலு-நித்தீஷ் ஒன்றாக பிரச்சாரம் செய்து 20 வருட கால பகைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். நமது பொது எதிரி பாஜகதான் என்று அறிவித்தனர். அதே நேரம், பாஜகவின் வளர்ச்சியை பார்த்து பயந்து, சந்தர்ப்பவாத கூட்டணியை இவ்விருவரும் ஏற்படுத்தியதாக பாஜக குற்றம்சாட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டது.
வெற்றி தீர்மானிக்கும்
பீகாரில் தலா 5 சீட்டுகளில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளமும், எஞ்சிய ஐந்து சீட்டுகளில் நித்தீஷின் ஐக்கிய ஜனதாதளமும் போட்டியிடுகின்றன. பாஜக 9 இடங்களிலும், கூட்டணி கட்சியான லோக் ஜன சக்தி ஓரிடத்திலும் போட்டியிடுகின்றது. இந்த தேர்தலின் முடிவுகளை வைத்துதான் இவ்விருவரும் தொடர்ந்து ஓரணியில் இருப்பார்களா, அல்லது பிய்த்துக்கொண்டு ஓடுவார்களா என்பது தெரியவரும்.
எடியூரப்பாவா-சித்தராமையாவா?
கர்நாடகாவை பொறுத்தளவில் மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா லோக்சபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவர் வகித்து வந்த ஷிகாரிபுரா சட்டசபை தொகுதி காலியாக உள்ளது. அங்கு எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா போட்டியிடுகிறார். பெல்லாரி ஊரக தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த பாஜகவின் ஸ்ரீராமலுவும் எம்.பியாகிவிட்டதால் அந்த தொகுதிக்கும் தேர்தல் நடக்கிறது. இவ்விரண்டும் பாஜக வசம் இருந்தவை என்பதால் அதை தக்க வைக்க பாஜக பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது.
காங்கிரஸ் கைப்பற்றுமா?
கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடைபெறும் மற்றொரு தொகுதி சிக்கோடி. இங்கு காங்கிரசின் பிரகாஷ் ஹுக்கேரி தேர்ந்தெடுக்கப்பட்டு சித்தராமையா அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்தார். ஆனால் அவரை லோக்சபா தேர்தலில் போட்டியிட பணித்தது காங்கிரஸ் மேலிடம். ஹுக்கேரிக்கு இதில் விருப்பமில்லாவிட்டாலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனவே சிக்கோடி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.
சித்தராமையா பதவிக்கு சோதனை
கர்நாடகாவில் 28 லோக்சபா தொகுதிகளுக்கு நடந்த பொதுத்தேர்தலில் 17 தொகுதிகளை பாஜக வென்றது. ஆளும் கட்சியான காங்கிரஸ் 10 தொகுதிகளில் மட்டுமே வென்றது. எனவே மோடி அலை இப்போதும் பாஜகவுக்கு கை கொடுக்கும் என்று நம்புகிறது பாஜக. மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் தோற்றால், சித்தராமையாவின் முதல்வர் பதவிக்கு ஆபத்து வரலாம் என்கிறது காங்கிரஸ் தரப்பு.
ம.பி.யில் பாஜக கொடி
இதேபோல மத்திய பிரதேசத்தின் மூன்று தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலும் பாஜகவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது. சாதகமாகவே இருக்கும் என்கிறது அரசியல் வட்டாரம்.