10 மாநில இடைத்தேர்தல்- உ.பி., ராஜஸ்தானில் பாஜக படுதோல்வி! சமாஜ்வாடி கை ஓங்கியது!!
டெல்லி: நாடு முழுவதும் 10 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தானில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வியைத் தழுவியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியே அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
10 மாநிலங்களில் உள்ள 3 லோக்சபா, 33 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன.
வதோதரா (குஜராத்), மைன்புரி (உத்தரபிரதேசம்), மேடக் (தெலுங்கானா) ஆகிய 3 லோக்சபா தொகுதிகளுக்கும், உத்தரப்பிரதேசத்தில் 11, குஜராத்தில் 9, ராஜஸ்தானில் 4, மேற்கு வங்காளத்தில் 2, வடகிழக்கு மாநிலங்களில் 5, ஆந்திரா மற்றும் சத்தீஸ்கரில் தலா ஒன்று என 33 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 13ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது.
வாக்குப் பதிவு குறைவு
இத்தேர்தலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததால் அமைதியாகவே தேர்தல் நடந்து முடிந்தது. ஆனாலும் வாக்குப் பதிவு என்பது மிகவும் குறைவாகவே பதிவானது. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.
சமாஜ்வாடி அமோகம்
உத்தரபிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த 11 தொகுதிகளில் 2-ல் தான் முன்னிலை வகிக்கிறது. 4 தொகுதிகளில் சமாஜ்வாடி கைப்பற்றிவிட்டது. 5-ல் சமாஜ்வாடி முன்னிலை வகிக்கிறது.
பாஜக தோல்வி
லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடும் அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வகையில் 70 தொகுதிகளை அள்ளிய பாரதிய ஜனதா தற்போது படுதோல்வியைத் தழுவியுள்ளது.
ராஜஸ்தானிலும் படுதோல்வி
இதேபோல் ராஜஸ்தானில் பாஜக வசம் இருந்த 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 3 ஐ காங்கிரஸிடம் பறிகொடுத்து படுதோல்வியை சந்தித்துள்ளது பாஜக.
குஜராத்தில் ஓகே
குஜராத் மாநிலத்தில் 9 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் 7ஐ பாஜக கைப்பற்றியுள்ளது. 2-ல் காங்கிரஸ் வென்றுள்ளது.
வதோதராவில்..
பிரதமர் மோடி வெற்றி பெற்று பின்னர் ராஜினாமா செய்த குஜராத்தின் வதோதரா லோக்சபா தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி தக்க வைத்துக் கொண்டது.
மேற்கு வங்கத்தில்..
மேற்கு வங்கத்தில் 2 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா ஒரு தொகுதியைக் கைப்பற்றி முதல் முறையாக அம்மாநில சட்டசபைக்குள் நுழைந்துள்ளது.