இடைத்தேர்தல்: தெ.தேசம் வெற்றி-எம்.எல்.ஏவானார் சாப்ட்வேர் என்ஜினியர்!மேடக்கில் மீண்டும் டி.ஆர்.எஸ்.!
விஜயவாடா/ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் இரு மாநிலங்களின் ஆளும் கட்சிகளான தெலுங்குதேசம் மற்றும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியே வெற்றி பெற்றுள்ளன.
ஆந்திராவின் நந்திகமா சட்டசபை தொகுதி தெலுங்குதேசம் கட்சியின் எம்.எல்.ஏவாக இருந்த பிரபாகர் ஜூன் மாதம் மாரடைப்பால் காலமானார். இதனால் அத்தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொண்டது.
மேடக் லோக்சபா தொகுதி
இதேபோல் மேடக் லோக்சபா தொகுதியில் எம்.பி.யாக இருந்த தெலுங்கானா ராஷ்டிரி சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ் ராஜினாமா செய்ததால் அங்கும் தேர்தல் நடைபெற்றது.
மறைந்த எம்.எல்.ஏ. மகள்
நந்திகமா சட்டசபை தொகுதியில் மறைந்த எம்.எல்.ஏ பிரபாகர் மகள் சவும்யா, தெலுங்குதேசம் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவர் ஒரு சாப்ட்வேர் என்ஜினியர்.
ஒய்.எஸ்.ஆர். வேட்பாளர் இலலி
சவுமியாவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என்று தெலுங்குதேசம் கட்சி கேட்டுக் கொண்டதால் அவரை எதிர்த்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தவில்லை.
படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ்
ஆனால் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தியது. இன்று வாக்குகள் எண்ணப்பட்ட போது சவுமியா 99, 748 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் போடபதி பாபு ராவ் வெறும் 24, 921 வாக்குகளையே பெற்றார். இதனால் சவுமியா 74, 827 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மேடக்கை தக்க வைத்த டி.ஆர்.எஸ்.
இதேபோல் மேடக் லோக்சபா தொகுதியில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி வேட்பாளர் பிரபாகர் ரெட்டி மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.