காஷ்மீரில் குரான் மீது சத்தியம் வாங்கி ஓட்டு சேகரித்த பெண் அமைச்சர்... வீடியோவால் பரபரப்பு
ஸ்ரீநகர்: காஷ்மீர் அமைச்சர் ஒருவர் வாக்களர்களிடம் குரான் மீது சத்தியம் வாங்கி வாக்குச் சேகரிப்பது போன்ற வீடியே வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டு விட்ட நாள் முதலே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள வேட்பாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் தீவிரமாக கண்காணிக்கப் பட்டு வருகின்றனர். இந்நிலையில் காஷ்மீர் மாநில பெண் அமைச்சர் ஒருவர் வாக்காளரிடம் வாக்களிப்பதாக குரான் மீது சத்தியம் வாங்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
ஒரே பெண் அமைச்சர்...
காஷ்மீர் மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லாவின் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சர் சகினா ஐட்டூ. இவர் வரும் லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
குரான் மீது சத்தியம்....
இந்நிலையில் நேற்று ஒரு வீடியோ காட்சி வெளியானது. 3.11 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோ காட்சியில் ஐட்டூ ஒரு முதியவரிடம் "நான் உங்களது மகள் போன்றவள். எனவே கடந்த தேர்தலில் ஆதரவு அளித்தது போல இந்த தேர்தலிலும் எங்களது கட்சிக்கு ஆதரவு அளிக்கும் படி புனிதமான குரான் மீது சத்தியம் செய்து கொடுங்கள்" எனக் கேட்பது போலவும், அந்த முதியவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து சத்தியம் செய்வது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.
சர்ச்சை...
மதத்தைப் பயன்படுத்தி வாக்காளர்களிடம் ஓட்டுக் கேட்பது போன்ற இக்காட்சிகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், "இதில் தவறாக ஏதும் இல்லை. இது நமது பண்பாட்டின் ஒரு பகுதியாகும். தேர்தல் நடத்தை விதிகள் வகுக்கப்படுவதற்கு முன்னரே இது நடந்து முடிந்து விட்டது" என அம்மாநில ஆளும் கட்சி சார்பில் விளக்கமளிக்கப் பட்டுள்ளது.
இது முன்பு எடுத்தது...
இது தொடர்பாக அம்மாநில முதல்வர் அப்துல்லா தனது வலைத்தளத்தில் "நான் இது குறித்து சகினாவுடன் பேசினேன். அப்போது அவர் இவ்வீடியோ கடந்த மாதம் அதாவது நடத்தை விதிகள் வகுக்கப்படும் முன் எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சியினர் சதி....
மேலும் இக்காட்சியில் அவர் யாரையும் ஏமாற்றவுமில்லை. மிரட்டவுமில்லை. வயதான நபர் ஒருவரை எங்களது கட்சிக்கு ஆதரவு அளியுங்கள் என்று அன்புடன் தான் கேட்கிறார். எங்கள் மீது குற்றம் சுமத்துவது எதிர்க்கட்சியினரின் திட்டமிட்ட சதியாகும். தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகளை திசைதிருப்பும் நோக்குடன் அவர்கள் செயல்படுகின்றனர்" என கூறியுள்ளார்.