காவிரி விவகாரத்தில் தமிழக கட்சிகளை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்- தேவகவுடா அட்வைஸ்
பெங்களூர்: காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிலுள்ள அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக இல்லாவிட்டால், கர்நாடகாவுக்கு இழப்பு ஏற்படும், இந்த விஷயத்தில் தமிழக கட்சிகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் தேசிய தலைவருமான தேவகவுடா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹாசனில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: காவிரி விவகாரத்தில், சிறுபிள்ளைத்தனமாக கர்நாடகா நடந்து கொண்டால் தமிழகம் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு அதிகரித்துவிடும். எனவே மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது கர்நாடக அரசின் கடமை. காவிரி விவகாரத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் தங்களுக்குள் உள்ள வேற்றுமைகளை மறந்துவிட்டு ஒரே அணியில் திரண்டுள்ளனர்.
கர்நாடகாவிடமும் அதே ஒற்றுமை மனப்பாங்கு வர வேண்டும். பருவமழை கர்நாடகாவை கைவிட்டுள்ளது. எனவே காவிரி நதியை நம்பியுள்ள மாவட்டங்களில் நான் சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்ய உள்ளேன். இவ்வாறு தேவகவுடா தெரிவித்தார்.